Tuesday, April 12, 2016

திசை மாறும் தேசிய விருதுகள்?

(தி இந்துவில் 2016 ஏப்ரல் 1 அன்று வெளியானது) 

விருதும் சர்ச்சையையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தியத் திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகளும் அப்படித்தான். 2015-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பற்றிய அறிவிப்பு கடந்த 28-ம் தேதியன்று பிற்பகலில் வெளியானது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் பல சர்ச்சையான கருத்துகள் சமூக வலைதளங்களில் உலவ ஆரம்பித்தன. சர்ச்சைக்கு முதலடி எடுத்துக் கொடுத்தது ‘பாகுபலி’. இந்திய அளவில் சிறந்த படத்துக்கான விருது தெலுங்குப் படமான ‘பாகுபலி’க்கு என்ற அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. சினிமாவைத் தொடர்ந்து கவனிக்கும் பலருக்கும், திரைக்கதையில் பல குறைகளைக் கொண்ட அம்புலிமாமா கதைப் படமான ‘பாகுபலி’க்குச் சிறந்த படத்துக்கான விருதா என்ற வியப்பு மேலிட்டது.

பாகுபலி
இந்த தேசிய விருதுகளில் எந்த சர்ச்சையும் இல்லை என்று பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஆனால், எப்போதும் போலவே இந்த ஆண்டும் சர்ச்சைகள் தாரளமாகப் புழங்கின. ‘பாகுபலி’யில் வலியுறுத்தப்பட்டிருந்த ராஜ விசுவாசம், பண்டைய சமூக அமைப்பைத் தூக்கிப் பிடித்தல் ஆகியவை காரணமாக மத்திய அரசு விருது அளித்திருக்கிறதா என்னும் சந்தேகத்தைப் பல தரப்பினரும் எழுப்பினர். இதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த மாநில மொழியுமல்லாத சம்ஸ்கிருத மொழியில் உருவான ‘பிரியமானஸம்’ படத்துக்கும் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. திரைப்படம் எடுக்கச் சிறந்த மாநிலமென குஜராத்துக்குக் கிடைத்திருக்கும் விருதும் எல்லோரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

இப்படியான காரணங்களால் காட்டமான கேள்விக் கணைகளும் விமர்சனக் கருத்துகளும் தேர்வுக் குழுவைப் பதம்பார்க்கின்றன. பஞ்சாபைச் சேர்ந்த இயக்குநர் குர்விந்தர் சிங், நல்லறிவு படைத்த தேர்வுக் குழு ‘பாகுபலி’யைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்குமா என்ற கடுமையான கேள்வியை எழுப்பியிருக்கிறார். அத்துடன் நிறுத்தவில்லை அவர். இந்த ஆண்டு வழங்கப்பட்ட தேசிய விருதுகள் கேலிக்கூத்து எனவும், மாநில மொழிப் படங்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறது, பொழுதுபோக்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுக் கொந்தளித்திருக்கிறார்.

கான் பட விழா உள்ளிட்ட உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அவர் இயக்கிய ‘சௌதி கூட்’ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த படம் என்ற விருதுக்கான தகுதியைக் கொண்டிருந்தபோதும் சிறந்த மாநில மொழித் திரைப்படப் பிரிவிலேயே அதற்கு விருது கிடைத்ததைப் பெரும் ஏமாற்றமாகக் கருதுகிறார் அவர். சிறந்த ஜனரஞ்சக படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் ஆகிய பிரதான விருதுகள் அனைத்தையும் இந்தித் திரையுலகம் தட்டிக்கொண்டு போனதால் மாநில மொழிப் படங்களை உருவாக்குவோர் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர் என்பதாகச் செய்திகள் வெளியாகின்றன.

பாஜிராவ் மஸ்தானி
முதன்முறையாகச் சிறந்த இயக்குநர் விருது பெற்றதில் மகிழ்ந்திருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி, ‘பாஜிராவ் மஸ்தானி’யில் சிறப்பாகப் பங்களித்த தீபிகா படுகோன் அல்லது பிரியங்கா சோப்ராவுக்கு விருது கிடைத்திருக்கலாம் என்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார். அதேபோல் இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் கடுமையான உழைப்பைத் தந்திருக்கும் விக்ரமுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனத் தமிழ்த் திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், ஒப்பனையால் மட்டுமே தனித்துத் தெரிந்த அந்தக் கதாபாத்திரத்துக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்த்ததே வியப்பானது என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. சர்வதேசக் கவனம் பெற்ற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மஸான்’ படத்துக்கு இந்திரா காந்தி பெயரிலான சிறந்த புதுமுக இயக்குநர் விருதே கிடைத்திருக்கிறது. விருதுக்குரிய படங்களைத் தேர்வு செய்யும் குழுவினரின் ரசனையைப் பொறுத்தே தேர்வுகள் அமைகின்றன. கடந்த வருடம் நீதியமைப்பைக் கேள்வி கேட்ட துணிச்சல் மிக்க படமான ‘கோர்ட்’டுக்குச் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது. இந்த வருடம் பொழுதுபோக்குப் படங்கள் அதிகமான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளன. விருதுப் படங்களில் கலைத் தன்மை சிறிதேனும் தூக்கலாக இருக்கும் என்பது பொதுவான புரிதல். அப்படியான படங்களை மட்டுமே விருதுக்காக விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அப்படியில்லாமல் ரசிகர்களைக் கற்பனை உலகின் மயக்கத்தில் ஆழ்த்தும் படங்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவிக்கும்போது, கலை தாகத்துடன் படமெடுத்த கலைஞர்கள் மனம் வருந்துவது இயற்கை. ஆனால், கலைப் படங்களுக்கு மட்டுமே விருது வழங்க வேண்டுமா பொழுதுபோக்குப் படங்களுக்கு வழங்கக் கூடாதா என்று மறு தரப்பினர் வாதிட்டால் அதையும் பரிசீலிக்கத்தான் வேண்டும்.

விசாரணை
அறுபதுக்கும் மேற்பட்ட இந்திப் படங்கள், தூங்கா வனம், உத்தம வில்லன், தனி ஒருவன், கிருமி, தாரை தப்பட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள், தெலுங்கு மொழிப் படங்கள் பதினொன்று, சம்ஸ்கிருத மொழிப் படங்கள் இரண்டு உள்ளிட்ட 308 படங்கள் விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான ரமேஷ் சிப்பி தலைமையிலான பதினோரு பேர் குழுதான் இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய படங்களைப் பரிந்துரைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகச் சிறந்த படத் தொகுப்புக்கான விருதைத் தமிழகம் தட்டிச் சென்றிருக்கிறது. படத் தொகுப்பு உள்ளிட்ட மூன்று விருதுகள் ‘விசாரணை’ படத்துக்குக் கிடைத்திருக்கின்றன. இப்படம் அதற்கான தகுதி கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ‘ஆடுகளம்’ படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்தபோது சில மாற்றுக் கருத்துகள் எழுந்தன. ‘ஆடுகள’த்தின் இயக்குநர் வெற்றி மாறனின் குரு பாலு மகேந்திரா அப்போதைய விருதுக் குழுவில் இருந்தார். இப்போதும் அதேபோல் ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. விருதுக் குழுவில் கங்கை அமரன் இடம்பெற்றிருந்த நிலையில், ‘தாரை தப்பட்டை’யில் சிறந்த பின்னணியிசை அமைத்ததற்காக இளையராஜாவுக்கு ஐந்தாம் முறையாகத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

சசிகுமார், பாலா, இளையராஜா, வரலட்சுமி
இளையராஜா இசை தொடர்பான எல்லா வித விருதுக்கும் தகுதியானவர், அவரால் விருதுகளுக்குத்தான் பெருமை என அவருடைய ரசிகர்கள் புளகாங்கிதத்துடன் சொல்கிறார்கள். ஆனால், ‘தாரை தப்பட்டை’யில் விருதுபெறும் அளவுக்குச் சிறப்பான பின்னணியிசை அமைக்கப்பட்டிருந்ததா எனக் கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள். ‘தாரை தப்பட்டை’போன்ற மிகச் சாதாரணப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதால், அவரது ஆயிரமாவது படம் என்ற விளம்பரத்தின் பங்கு விருது வழங்கலில் ஆதிக்கம் செலுத்தியிருக்குமோ என்றும் விமர்சகர்கள் சந்தேகம் கொள்கிறார்கள். இயக்குநர் பாலா படங்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு விருதைப் பெற்றுவருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சிறந்த கலை மற்றும் பண்பாட்டுப் படம் என்ற பிரிவில் இயக்குநர் அம்ஷன் குமார் இயக்கிய ‘யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி’ என்னும் ஆவணப் படம் தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. சமூக வலைத் தளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்ட அளவுக்கு ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெறவில்லை. ஆவணப் படம் தொடர்பான நமது கவனமின்மையையே இது காட்டுகிறது. மேலும், திரைப்படம் குறித்து எழுதித் தள்ளும் தமிழ் மொழியிலிருந்து ஒரு நூல்கூட விருதுக்காக விண்ணப்பிக்கப்படவே இல்லை என்பதுவும் வருத்தமான செய்தி.

Saturday, April 9, 2016

ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்!

(தி இந்துவில் 2016 ஏப்ரல் 8 அன்று வெளியானது)

ஹாலிவுட் பட ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங்களில் ஒன்று பென்-ஹர். 1959-ம் ஆண்டில் வெளியாகி உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற படம் இது. ஒரு காவியமாகப் போற்றப்படும் இந்தப் படம், அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்கு அடிப்படையான வரலாற்று நாவல் பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட் (1880). இதை எழுதியவர் லெவ் வாலஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளர். 19-ம் நூற்றாண்டில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ நூல் இது என்று சொல்லப்படுகிறது. இந்த நாவல் இதுவரை நான்கு முறை படமாக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது முறையாகவும் இதே நாவல் இப்போது ஹாலிவுட்டில் படமாக உருவாகியிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளது.

ரோமைச் சேர்ந்த பால்ய நண்பனால் தவறாகக் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு அடிமையாகக் காலங்கழிக்கும் யூத பிரபுவின் கதை இது. அத்தனை துயரங்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டு தனக்குத் துரோகமிழைத்த நண்பனைப் பழிவாங்க சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் ஜூடா பென்ஹர். இந்நிலையில் இவன் நாசரேத்தின் இயேசுவை அடிக்கடி சந்திக்க சந்தர்ப்பம் அமைகிறது. அவருடனான சந்திப்பு ஜூடா பென் ஹர் வாழ்வில் மாற்றத்தை உருவாக்குகிறது. இப்படியாகப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதையை கெயித் ஆர் க்ளார்க்கும் ஜான் ரிட்லியும் எழுதியிருக்கிறார்கள்.

ஜூடா பென்ஹர் வேடமேற்றிருக்கிறார் ஜேக் ஹஸ்டன் என்னும் ஆங்கில நடிகர். மார்கன் ஃப்ரீமேன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். திமுர் பிக்மாம்பிதவ் என்னும் ரஷ்ய இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆலிவர் உட். 3 டியில் தயாராகியிருக்கும் இந்தப் படம் ஹாலிவுட் ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட் என்றும் சொல்லும்படியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறது இதன் டிரெயிலர். பாராமவுண்ட் பிக்சர்ஸ், எம்.ஜி.எம். பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை விநியோகிக்கின்றன. ரசிகர்கள் மனதில் காவியமாக நிலைத்துவிட்ட பென்ஹர் (1959) படத்தை மிஞ்சும் வகையில் இப்படம் இருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Saturday, April 2, 2016

அம்ஷன் குமாருக்கு தேசிய விருது


இங்கிலாந்தில் வாழும் ஆர். பத்மநாப ஐயரின் ஊக்கத்தின் பேரில் அம்ஷன் குமார் உருவாக்கிய படைப்பே யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி எனும் ஆவணப்படம். தஞ்சாவூர்ப் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டாலும் இலங்கையில் இணுவில் என்னுமிடத்தில் பிறந்து, அளவெட்டியில் வாழ்ந்த தவில் இசைக் கலைஞர் யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி. பிரபல நடிகரோ அரசியல் தலைவரோ பெறுவதைப் போன்ற வெகு மக்கள் அபிமானத்தைப் பெற்ற கலைஞர் அவர். அப்படியான கலைஞர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை விவரிக்கும் ஆவணங்கள் மிகவும் சொற்பமே.


அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா எனப் பல நாடுகளில் வாழும் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், தெட்சிணாமூர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரிடம் தெட்சிணாமூர்த்தி பற்றிய தகவல்களைப் பெற்று, அதன் மூலம் அந்த இசைக் கலைஞர் பற்றிய முழுச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும் பாங்கு தனித்துவமிக்கதாக உள்ளது. தன்னிடம் கிடைத்த மிகச் சில ஆவணங்களின் வழிகாட்டுதலோடு மிகவும் கொண்டாடப்பட்ட இசைக் கலைஞரை உலகுக்குப் பிரபலப்படுத்தும் வகையிலான ஆவணப் படத்தைக் கர்ம சிரத்தையாக எடுத்து வெளியிட்டிருக்கும் அம்ஷனுக்கு அதற்கான தேசிய விருது கிடைத்திருப்பது சரியான சமயத்தில் கிடைத்திருக்கும் தகுந்த அங்கீகாரமே.

Saturday, March 5, 2016

முதல் பரிந்துரையில் ஆஸ்கர்!

(தி இந்துவில் 04.03.2016 அன்று வெளியானது)

ஆஸ்கர் விருதுக்காகப் பல ஆண்டுகள் போராடும் நடிகர்கள் மத்தியில் அவ்விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட முதல் முறையே ஆஸ்கரை வென்றிருக்கிறார் நடிகை ப்ரே லார்சன். லென்னி ஆப்ரஹம்சன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான 'ரூம்' திரைப்படத்துக்காக இந்த விருதைப் பெற்றிருக்கும் லார்சன் இதே படத்துக்காக கோல்டன் க்ளோப் விருதையும், பாப்தா விருதையும் இந்த ஆண்டு வென்றிருக்கிறார். தன் மகன் ஜேக்குடன் ஒரு சிறிய அறையில் தங்கியிருக்கும் ஜாய் என்னும் தாய் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்றிருந்தார் லார்சன்.

ஜேக்கின் தந்தையான நிக்கால் ஏழாண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பார் ஜாய். மகன் உறங்கும் பல சமயங்களில் நிக், ஜாயுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது வழக்கம். இத்தகைய துயரார்ந்த கதாபாத்திரமான ஜாய் வெளிப்படுத்த வேண்டிய அத்தனை உணர்வுகளையும் மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தித் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டார் லார்சன். அதற்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுவிட்டார் என்பதுதான் அவருடைய தனிச் சிறப்பு.

தனது துறை நடிப்புதான் என்பதை ஆறு வயதிலேயே முடிவு செய்துவிட்டார் லார்சன். 1989-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று கலிஃபோர்னியா மாகாணத்தின் ஸேக்ரமெண்டோ என்னுமிடத்தில் பிறந்தார். நடிப்புத் துறையில் முன்னேற வேண்டும் என்னும் தனது கனவு கைகூட வேண்டும் என்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குத் தன் தாயுடனும் சகோதரியுடனும் குடியேறியவர் அவர். முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

2003-ல் டிஸ்னியின் தொலைக்காட்சிப் படமான ‘ரைட் ஆன் ட்ராக்’கில் நடித்தார். பாடகியாக அவதாரமெடுத்த லார்சன் 2005-ல் தனது ஆல்பமான ‘ஃபைனலி அவுட் ஆஃப் பி.இ.’யை வெளியிட்டார். சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை அது பெற்றது. 2006-ல் வெளியான ‘ஹூட்' படத்தில் இவரது நடிப்பு பெரிய கவனத்தைப் பெற்றது.

தொடர்ந்து ‘க்ரீன்பெர்க்' (2010), 21 ‘ஜம்ப் ஸ்ட்ரீட்' (2012) உள்ளிட்ட படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். ஆனால் அவரது நடிப்புக்குத் தீனி போட்ட படமாக ‘ஷார்ட் டேர்ம் 12’ அமைந்தது. அந்தப் படத்தில் அவர் விமர்சகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். இந்தப் பயணத்தில் முத்திரை பதிக்கும் வகையில் அமைந்துவிட்டது ரூம் திரைப்படம். சிறிய அறையில் வாழும் கதாபாத்திரத்தில் நடித்தபோதும் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகையாகிவிட்டார் லார்சன்.

Saturday, February 27, 2016

குங்பூ பாண்டா 3: கரடியின் தொடரும் அதிரடி!

(தி இந்துவில் 26.02.2016 அன்று வெளியானது)


‘குங்பூ பாண்டா’ அனிமேஷன் படம் 2008-ல் வெளியானது. உடல் பருத்த போ என்னும் பாண்டா கரடியின் வீர சாகச அட்டகாசம் உலகமெங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது. இதைத் தொடர்ந்து ‘குங்பூ பாண்டா-2’ திரைப்படம் 2012-ல் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த ‘குங்பூ பாண்டா’ வரிசைப் படங்களில் மூன்றாம் படமான ‘குங்பூ பாண்டா-3’ அமெரிக்காவிலும் சீனாவிலும் ஜனவரி 23 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள விலங்குகளின் சாகசக் காட்சிகள் நம்ப முடியாத வகையிலான அதிசய உலகத்தை நமது கண் முன்னே கொண்டுவருகின்றன. ஜனவரி 19 அன்று வெளியான இந்தப் படத்தின் டிரெயிலரே நம்மை மெய்மறக்கச் செய்கிறது. இதுவரை இந்த டிரெயிலரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவரக்கூடிய வகையிலேயே இந்த ‘குங்பூ பாண்டா’ படமும் இருக்கிறது. ஜோனாதன் ராபர்ட் எய்பெல், கிளன் பெர்கர் ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை ஜெனிபர் யூ நெல்சன் அலெஸாண்ட்ரோ கர்லானி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். ‘குங்பூ பாண்டா-3’ படத்துக்கு ஜேக் ப்ளாக், ப்ரயான் க்ரான்ஸ்டன், டஸ்டின் காஃப்மேன் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

தன் இனத்தில் தான்தான் கடைசி வாரிசு என நம்பும் பாண்டா கரடியான போ, தன் தந்தையைக் கண்டுபிடிக்கிறது. பாண்டாவின் பூர்விகக் கிராமத்துக்குப் போவை அழைத்துச் செல்கிறார் தந்தை. அப்போது போவும் அதன் நண்பர்களும் பாதுகாத்துவந்த அமைதிப் பள்ளத்தாக்கு, எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறது. தப்பிப் பிழைத்த போர் வீரர்கள் போவைத் தேடிச் செல்கிறார்கள் என்று போகிறது கதை.

ஏற்கெனவே வெளியான ‘குங்பூ பாண்டா’ படங்களைப் போலவே இந்தப் படமும் முழுப் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். 145 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கலக்கலான கிராஃபிக்ஸ் காட்சிகளை 3 டி எஃபக்டில் உருவாக்கியிருக்கிறார்கள். ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் நிறுவனமும், ஓரியண்டல் ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன. ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் படத்தை விநியோகிக்கிறது. இந்தியாவில் இந்தப் படம் மார்ச் 10 அன்று வெளியாகவிருக்கிறது. அனிமேஷன் பட ரசிகர்கள் தவறவிட மாட்டார்கள் என்பதை ட்ரைலரே உறுதிசெய்கிறது.

Monday, February 22, 2016

இடமோ சிறுசு, இல்லமோ பெருசு

(2016 பிப்ரவரி 21 அன்று தி இந்துவில் வெளியானது)


நகரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் பிரச்சினை வீடு சார்ந்ததாகவே இருக்கிறது. வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை வாடகையாகக் கொடுத்தும் நிம்மதியாக வசிக்க வழியில்லை என்ற வருத்தத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்கள். புறாக் கூண்டு போன்ற அபார்ட்மெண்ட்களை விலை கொடுத்து வாங்குவதே பெரும் போராட்டமாக இருக்கிறதே என்ற முணுமுணுப்புகள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. குறைந்த இடத்தில் பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் போதுமான அளவில் வீடு கிடைத்தால் பெரிய வரம் என்ற நினைப்பு எழாதவர்கள் இருக்க இயலாது. இந்த எதிர்பார்ப்பை உணர்ந்து கட்டுநர்களும் முடிந்த அளவில் குறைந்த இடத்தில் போதுமான வசதியை அளிக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவு எளிதில் பூர்த்திசெய்துவிட முடியாது.

உலகமெங்கிலும் நகரப் பகுதியில் குறைந்த இடத்தில் வசதியான வீடு என்னும் தேவை பெருகிக்கொண்டே இருக்கிறது. வீட்டுத் திட்டங்களை வடிவமைக்கும் வடிவமைப்பாளர்களும் தங்கள் அறிவைக் கூர்தீட்டி புதுமையான முறையில் நவீனமாக வீடுகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த கான்ஸ்டண்டின் எண்டலேசிவ் என்னும் விஷுவலைஸர் வீட்டின் உள்ளலங்காரத்தில் புதுமையான உத்திகளைப் பிரயோகித்துவருகிறார். 400 சதுர மீட்டர் பரப்புக்குள் அடங்கும் வீடுகளையே மிகவும் விசாலமானதாகக் காட்டும் வகையில் அமைத்துவிடுகிறார் அவர்.

அவர் கட்டிய மொத்தமே 344 சதுர அடி பரப்பு கொண்ட ஒரு வீட்டில் ஹாலிலேயே படுக்கையறை அமைந்திருக்கிறது. ஆனால் படுக்கையறைக்குக் கண்ணாடிச் சுவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். பார்ப்பதற்கு அது தனியான அறையாகத் தெரியாமல் ஒட்டுமொத்தமாகப் பெரிய அறையாகத் தெரியும். ஆனால் படுக்கையறையும் தனியாக அமைந்திருக்கும். சிறிய உத்திதான் ஆனால் நம் கண்ணே நம்மை ஏமாற்றிவிடும் அளவுக்கு மிகவும் நேர்த்தியாக அதை அமைத்துவிடுகிறார்.

வசீகரமான இரண்டு நாற்காலிகள் ஒரு சிறிய டைனிங் டேபிள் ஆகியவற்றைப் போட்டு மனங்கவரும் ஒரு டைனிங் ஏரியாவை உருவாக்கிவிடுகிறார். அந்த டைனிங் அமைப்பே விருந்தினர்களை எளிதாகக் கவர்ந்திழுத்துவிடும். மிகவும் ஒடுங்கிய சமையலறையில் இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி அவை மிகவும் திறந்தவெளியில் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார். அதிக இடம் இல்லாவிட்டால்கூட சமையலறையில் ஒரு அமைதி எப்போதும் இருப்பது போன்று இது தோற்றம்கொள்கிறது.

மிகச் சிறிய குளியலறையில் அவர் வெள்ளை மார்பிள்களைக் கொண்டு இழைத்துவிடுகிறார். ஆகவே அந்தச் சிறிய குளியலறையே மிகவும் ஆடம்பரமான ஒன்றாக நம்மை எண்ணவைத்துவிடுகிறது. அந்தக் குளியலறையின் ஒரு மூலையில் செல்லம் போல் ஒரு ஷவர். அதைக் கண்ணாடிச் சுவர்களை வைத்து மறைத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது அறைக் குளியலே ஆனந்தக் குளியலாகத் தோன்றிவிடும். அந்த அளவு வசீகரமாக அதை அமைத்திருக்கிறார். மிகவும் சிறிய இடம் என்பதால் அதை எளிதில் சுத்தப்படுத்தலாம். ஆக, குளியலறை எப்போதும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சி தரும்.

அடிப்படைத் திட்டத்தைப் பெரிதும் மாற்றாமல் அழகிய, ஆடம்பர, அறைக் கலன்களையும், சுவரின் வண்ணங்களையும் மாற்றி அல்ட்ரா மாடர்ன் தோற்றத்தில் மற்றொரு வீட்டையும் உருவாக்கியிருக்கிறார். அவரது செயல்திட்டம் ஒன்று தான். மிகச் சிறிய இடத்தில் கண்ணுக்கு அழகான வசிப்பதற்கு வாகான வீட்டை அமைக்க வேண்டும் என்பதுதான். குறைந்த இட வசதி வீடு எப்படிக் கட்டுவது என யோசிப்பவர்கள் இதைப் போன்ற நிபுணர்களின் உத்தியைப் பின்பற்றினால் சிறப்பான வீட்டை அமைத்துவிடலாம்.

Sunday, February 21, 2016

சேதுபதி

சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்) அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கைத் துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியாரின் குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மருமகனுக்குப் பதில் சுப்புராஜ் கொல்லப்பட்டதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். இது தொடர்பாக சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. இந்த மோதலின் காரணமாக சேதுபதி வேலையைத் தற்காலிகமாக இழக்கிறார். மீண்டும் சேதுபதி வேலையில் சேர்ந்தாரா, வாத்தியார்தான் வென்றாரா என்பதை விவரித்துச் செல்கிறது சேதுபதி.

சேதுபதி அடர்த்தியான முறுக்கு மீசையுடன் ஆண்மைமிக்க தோற்றம் காட்டி நேர்மைத் திமிர் கொண்ட போலீசாக வலம் வருகிறார். அடிக்கடி மீசையை வீரத்துடன் தடவிவிட்டுக்கொள்கிறார். குடும்பத்தில் மனைவியுடன் குறும்பில் ஈடுபட்டு குண்டாத்தி எனப் பிரியத்துடன் கொஞ்சும் ஆசைக் கணவனாகவும், குழந்தைகளுடன் சரிக்குச் சரி விளையாடும் பாசத் தந்தையாகவும் இருக்கும் விஜய் சேதுபதி  காவல் நிலையத்திலோ டெரரான இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அந்தந்த நேரத்தில் அந்தந்த மனிதராக மாறிவிடுகிறார். கணவனையும் குழந்தைகளையும் உலகமாகக் கருதும் சராசரியான நடுத்தரவர்க்க மனைவி வேடம் ரம்யா நம்பீசனுக்கு. அதில் அவர் அழகுடன் பொருந்திப்போகிறார். சின்ன சின்ன ஊடல் காட்டி வசீகரிக்கிறார்.

வாத்தியாராக வரும் வேல ராமமூர்த்தி ஊருக்குப் பெரிய மனிதர். ஆனால் தன் வழியில் யாராவது குறுக்கிட்டாலோ எந்த நிலைக்கும் கீழிறங்கி எதிரிகளைப் பந்தாடும் தாதாவாக வந்துசெல்கிறார்.

எந்தப் புதுமையும் இல்லாத பழைய கதை என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகத் திரைக்கதையில் சில திருப்பங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அவற்றுக்குத் திரையரங்கில் பெரிய வரவேற்பும் கிடைக்கிறது. மிரட்டலான போலீஸ் அதிகாரியாக சேதுபதி அறிமுகமாகும் காட்சி, வாத்தியாரைப் பயமுறுத்தும் விதத்தில் வரும் சேதுபதி அவரை எதுவுமே செய்யாமல் விட்டுவிட்டுச் செல்லும் காட்சி, மேலும் விசாரணை கமிஷன் முன்பு காவலர் பொய் சொல்வதும் அதன் பின்னணிக் காட்சிகளும் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தேவையைப் பூர்த்திசெய்திருக்கிறது. ஸ்ரீகர்பிரசாத்தின் எடிட்டிங் திரைக்கதையில் வேகத்துக்கு உதவியுள்ளது. பல இடங்களில் காட்சிகளின் உணர்வை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பின்னணியிசை நெளியவைக்கிறது. மிரட்டலான போலீஸ் கதைப் படம் என்றாலும் இவ்வளவு பயங்கரமான இசையா என எண்ணவைக்கிறது. பாடல்கள் எவையும் படத்துடன் ஒன்றவேயில்லை. திரைக்கதையின் வேகத்துக்குத் தடையாகவே பாடல்கள் அமைந்துள்ளன. சேதுபதி வீட்டில் இல்லாத வேளையில் வாத்தியாரின் ஆட்கள் அவருடைய வீட்டுக்கு வந்து மிரட்டும் காட்சியில் சின்னப் பையன் துப்பாக்கியால் சுட்டு ஆட்கள் பயந்து ஓடுவது திரைக்கதையில் வித்தியாசமாக இருந்தாலும் நம்ப முடியவில்லை.

சேதுபதி சஸ்பெண்ட் ஆன பின்னர் கதையில் பெரிய சம்பவங்கள் எவையுமே இல்லை. சின்ன சின்ன திருப்பங்கள் மூலமாக மட்டும் கதை நகர்வதால் திரைக்கதை சிறிது தளர்ந்துவிடுகிறது. விசாரணை என்ற பெயரில் நான்கைந்து பேரை சேதுபதி சுட்டு வீழ்த்துவது கேள்விக்குள்ளாகவில்லை. ஆனால் அவரது காவல் நிலையத்தில் அவரது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டால் மாணவன் காயம்படுவது அவ்வளவு பெரிய விஷயமாகிவிடுகிறது. இது திரைக்கதையில் பெரிய அபத்தம். மொத்தத்தில் இயக்குநர் அருண் குமாரின் சேதுபதி ரசிகர்களின் நினைவில் நிற்கும் போலீசாக இல்லை என்றாலும் சேதாரமில்லாமல் தப்பிவிட்டான்.

Saturday, February 20, 2016

இயேசுவின் பால்ய காலம்!

(2016 பிப்ரவரி 19 அன்று தி இந்துவில் வெளியானது)


இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்படங்களுக்கு உலகெங்கிலும் பெரும் வரவேற்பு எப்போதுமே இருக்கிறது. இந்த வரவேற்பை அவ்வப்போது ஹாலிவுட் அறுவடை செய்துகொள்கிறது. அந்த வகையில் இயேசு பற்றிய புதிய ஹாலிவுட் திரைப்படம் ஒன்று மார்ச் 11 அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஏழு வயதான இயேசு மிகப் பெரிய ஆன்மிக ஆளுமையாக உருவானது வரையான சம்பவங்களின் சித்திரிப்புகள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. ‘த யங் மெஸையா’ என்னும் பெயர் கொண்ட இந்த ஹாலிவுட் படம் ஆன் ரைஸ் (Anne Rice) என்னும் எழுத்தாளரின் ‘கிறிஸ்ட் த லார்டு: அவுட் ஆஃப் ஈஜிப்ட்’ என்னும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவின் ஏழு வயதில் அவரது குடும்பம் எகிப்திலிருந்து மீண்டும் நாசரேத்துக்கு வந்த பின்னர் இயேசு எதிர்கொண்ட சம்பவங்களின் புனைவுக் காட்சிகள் திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. தனது பிறப்பு குறித்த மர்மத்தை அறிய இயேசு விருப்பம் கொள்கிறார். பரலோகப் பிதாவின் மகனாக இயேசு இருந்தபோதும் பிற குழந்தைகளிலிலிருந்து அவர் எப்படி மாறுபட்டார், அவரது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட போராட்டங்கள், தனது படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல் எனப் படத்தின் பயணம் அமைகிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றி, ‘த பாத் ஆஃப் 9/11’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சைரஸ் நௌராஸ்டேக் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். குழந்தைப் பருவம் முதல் பருவ வயதுவரை இயேசு கொண்டிருந்த இறை நம்பிக்கையைப் பரிசுத்த வேதாகமம் எப்படிச் சித்தரிக்கிறதோ அப்படியே யதார்த்தமாக இந்தப் படமும் சித்தரிப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இயேசுவின் கதையைப் புதிய கோணத்தில் சொல்லியிருக்கும் தங்கள் முயற்சிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்றும் இயக்குநர் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆடம் கிரீவ்ஸ் நீல், சீன் பீன், டேவிட் ப்ராட்லி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘த பேஷன் ஆஃப் ஜீசஸ் கிறைஸ்ட்’ திரைப்படத்துக்கு இசையமைத்த ஜான் டெப்னி இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஜோயல் ரான்சம் எனும் ஒளிப்பதிவாளர். இயேசுவின் குழந்தைப் பருவம் முதல் பருவ வயது வரையான வாழ்க்கைப் பாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் அது அதிகமாகத் திரையில் வெளிப்படவில்லை என்பதாலும் இந்தப் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

Sunday, February 14, 2016

மயக்கும் மாடுலர் கிச்சன்கள்


வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாய்க்கு ருசியாக உணவளிப்பதை நாம் விரும்பிச் செய்வோம். நமது விருந்தோம்பல் மீது நமக்கு அதிக அளவிலான பெருமிதம் உண்டு. விருந்துக்கு அடிப்படையான உணவைச் சமைக்கும் சமையலறையும் நமது வீட்டின் முக்கியப் பகுதி. ஒரு வீட்டின் சமையலறை எப்படிப் பராமரிக்கப்படுகிறது என்பது நமது பண்பாட்டு நடவடிக்கைகளில் மிகவும் முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படும். சமையலறை சரிவரப் பேணப்படாத வீடுகளுக்குச் சமூகத்தில் பெரிய மதிப்பு கிடைக்காது.

பாரம்பரியமான வீடுகளின் அமைப்பே மாறிவருவதால் நமது பாரம்பரிய சமையலறைகளும் கால ஓட்டத்தில் தமக்குரிய அடையாளத்தை மாற்றிக்கொண்டுவருகிறது. நவீனத்தை நோக்கிச் சமூகம் நகரும்போது இதைப் போன்ற புற அடையாளங்கள் மாறிக்கொண்டே வருவதைத் தவிர்க்க முடியாது. இப்போது அமைக்கப்படும் நமது வீடுகளில் நவீன சமையலறைகள் அமைக்கப்படுவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

அஞ்சறைப் பெட்டிகளும் மட்பாண்டங்களும் நிறைந்திருந்த பாரம்பரிய சமையலறைகளை இப்போது பார்க்க விரும்பினால் அருங்காட்சியகம்தான் செல்ல வேண்டும். நவீன சமையலறைகளில் புகைகூடப் படிவதில்லை. சமையற்கட்டின் சுவிட்சு போர்டுகளில் புகையும் எண்ணெய்ப் பிசுக்கும் படிந்து என்ன நிறத்தில் அமைக்கப்பட்ட போர்டும் கறுப்பு நிறத்துக்கு மாறிவிடும் என்ற கவலை இல்லை. நவீன சமையலறை வடிவமைப்பு குறைந்த இடத்தில் பல வசதிகளை வாரி வழங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. சமையலறையை மிகப் பெரிதாக அமைக்க வேண்டிய அவசியம் நவீன சமையலறைகளில் இல்லவே இல்லை. குறைவான இடத்தில் தேவையான அலமாரிகளை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் சமையலறையின் தோற்றமும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அமைந்துவிடுகிறது.

சமையலறையின் மேடை மிகவும் வசீகரமாக அமைக்கப்படுகிறது. மேடையிலேயே சமையல் எரிவாயு அடுப்பானது பதிக்கப்படுகிறது. மேடையில் மீது துறுத்திக்கொண்டு அடுப்பு அமையாமல் அடக்க ஒடுக்கமாக, பார்வைக்குப் பாந்தமாக அது அமைந்துவிடுகிறது. அதன் மீது அமைக்கப்படும் நவீன புகைபோக்கி புகையைச் சமையலறையிலிருந்து நாசூக்காக அப்புறப்படுத்திவிடுகிறது. நவீன புகைபோக்கி, அடுப்புக்கு மேலேயே அமைக்கப்படுவதால் சமையலின்போது ஆவியாகும் எண்ணெய்ப் புகையும், சப்பாத்தி போன்ற உணவைத் தயாரிக்கும்போது ஏற்படும் புகையும் அப்படியே மேலுக்குச் சென்று வீட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டுவிடுகிறது. இதனால் சமையலறையில் புழங்குவோர் கண் எரிச்சலின்றி, தும்மலின்றி நிம்மதியாக வேலை செய்ய முடியும்.

சமையல் மேடையின் கீழே உள்ள இடத்தை அழகாக மரப் பலகைகளால் அழகுபடுத்தி விதவிதமான இழுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. சமையலுக்குத் தேவையான உப்பு, புளி, மிளகாய் போன்ற சமையல் பொருள்களும் காய்கறிகளும் வைப்பதற்கு அவசியமான அலமாரிகள் உள்ளடங்கி அமைக்கப்படுகின்றன. சமையல் பாத்திரங்களை வைப்பதற்கும் இதிலேயே இடம் கிடைத்துவிடுகிறது. சமையல் கருவிகளான மிக்ஸி, கிரைண்டர், மைக்ரோவேவ் அவன் போன்றவற்றை எல்லாம் அழகாக வைப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விடுகின்றன.

இப்படிச் சமையலுக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் மிகவும் நவீன முறையில் அமைத்துவிடுவதால் பாரம்பரியமான சமையலறை போன்று சமையலுக்குப் பின்னர் சமையலறையைச் சுத்தப்படுத்தும் பெரும் பணியை மிக எளிதாகச் செய்துவிட முடிகிறது. பாத்திரங்களைக் கழுவுவதற்கு மேடையில் ஓரத்திலேயே கழுவு தொட்டி அமைத்துவிடுகிறார்கள். அவ்வப்போது சமையல் வேலைகளுக்கிடையே பாத்திரங்களைக் கழுவி அதனதன் இடத்தில் இருத்திவிட்டு இயல்பாகப் பிற வேலைகளைக் கவனிக்க இயலும்.

இத்தகைய நவீன சமையலறைகளை உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப விதவிதமாக அமைத்துக்கொள்ள முடியும். விதவிதமான வண்ணங்களில் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைவதா சிறந்த சமையலறை? அது பார்ப்பதற்கு அழகாகவும் சுத்தமாகவும் இருந்தால் மட்டும் போதுமா? சமையல் வேலைகளை எளிதில் செய்யும் வகையில் அமைந்திருப்பது அவசியம் அல்லவா? அப்படியான நவீன சமையலறையைத் தகுந்த நிபுணர்கள் கொண்டு அமைக்க வேண்டும். செலவு சிறிது அதிகம் ஆகும் என்றாலும் அதன் வசதிகளைக் கருத்தில் கொண்டு பொருளாதாரம் ஒத்துழைத்தால் நவீன சமையலறையை அமைத்துக்கொள்ளலாம்.

பிப்ரவரி 13 தி இந்து நாளிதழில் வெளியானது

Saturday, February 13, 2016

விலங்குகளுக்காக ஒரு மாநகரம்!



ஹாலிவுட்டின் அனிமேஷன் படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றவை. அதிலும் வால்ட் டிஸ்னியின் தயாரிப்பு என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திழுக்க வல்ல அனிமேஷன் படங்களைத் தயாரிப்பதில் மன்னர்கள் அவர்கள். அந்த வரிசையில் வெளிவர இருப்பதுதான் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸின் பிரம்மாண்ட 3 டி அனிமேஷன் படமான ஸூடோபியா (Zootopia).

இந்தப் படத்தில் விலங்குகளான ஒரு நகரம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஸூடோபியா என்னும் இந்த நகரத்தைப் போன்ற ஒரு நகரத்தை நீங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. குளு குளு என்ற இந்த நகரத்தில் எந்தச் சூழலிலிருந்து வரும் விலங்கும் தங்க இயலும். பெரிய விலங்கு சிறிய விலங்கு என்ற பேதமற்று அனைத்தும் ஒன்றாக வசிக்கும் சூழல் இங்கு உள்ளது. மனிதர்கள் வசிக்கும் நகரத்தைப் போன்றே இந்த நகரத்திலும் காவல்துறை துறை உண்டு. காவல்துறை துறை அதிகாரியான ஜுடி ஹாப்ஸ் என்னும் முயலுக்கு விலங்குகளைக் கட்டி மேய்ப்பது சாதாரண வேலையில்லை என்பது தெரிகிறது. ஒரு முக்கியமான வழக்கைத் துப்புதுலக்க வேண்டிய தேவையும் வருகிறது அவருக்கு. இப்படிப் போகிறது கதை.

ஜுடி ஹாப்ஸுக்குப் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் குட்வின் குரல் தந்திருக்கிறார். கான் ஆர்டிஸ்ட்டான நிக் வைல்ட் என்னும் நரிக்குப் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேஸன் பேட்மேன் குரல் கொடுத்திருக்கிறார். பைரோன் ஹவார்டு, ரிச் மோர் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். விலங்குகளின் சாகச விளையாட்டுகளைப் பார்க்கத் தயாரானவர்களுக்காக மார்ச் 3 அன்று 3டியிலும் திரைக்கு வருகிறது ஸூடோபியா.

பிப்ரவரி 12 தி இந்து நாளிதழில் வெளியானது

Monday, February 8, 2016

திருலோகம் என்றொரு கவி ஆளுமை

சங்கப் பாணர்களின் நீட்சியான கவிஞர்


பலன் எதிர்பாராமல் அரும்பெரும் பணிகளில் ஈடுபடுவது சென்ற தலைமுறையினரில் பெரும்பாலானோர் கொண்டிருந்த மாண்பு. எல்லாமே பிரதிபலன் நோக்கிய செயல்பாடுகள் எனச் சமூகம் பயணிக்கும் வேளையில் மாண்புடன் விளங்கிய அந்தத் தலைமுறையினரின் குணநலன்களை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் கடமை தற்காலத் தலைமுறையினருக்கு உண்டு. அதிலும் கலை சார்ந்த செயல்பாடுகளில் தன்னைப் பிணைத்திருப்போர் தன்னலம் கருதாமல் செய்ய வேண்டிய அரும் பணி இது. அப்படிப்பட்ட ஆளுமைகள் பற்றிய செய்திகள், தகவல்கள், சம்பவங்கள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றைப் புதிய தலைமுறையினர் அறிந்துகொண்டால்தான் நமது பண்பாடும் பாரம்பரியமும் கட்டிக் காக்கப்படும். உதயமாகும் தலைமுறை தனது கடந்த கால மனிதர்கள் பற்றிய செய்திகளை அறியும்போது, தான் எத்தகைய பாரம்பரியத்தில் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று பெருமிதமும் பிரியமும் கொள்ளும். அரிய ஆளுமைகளை அறியவைக்க வேண்டிய தருணத்தின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றியுள்ளார் ரவிசுப்பிரமணியன். ஆளுமைகளை வெவ்வேறு வகையில், தான் அறிந்த கலை வெளிப்பாட்டின் மூலம் ஒரு கலைஞன் அறியச் செய்யலாம். ரவிசுப்பிரமணியன் ஆவணப்படம் என்ற வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

சங்ககாலப் பாணர்களின் நீட்சி போல் கவிதைகள் பாடிய கவிஞர், சிறுபத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பன்முகத் தன்மை கொண்ட திருலோக சீதாராம் குறித்த ஆவணப்படத்தை எழுதி இயக்கி நம் முன் படைத்திருக்கிறார் ரவி. மகாகவி பாரதியாரை, அவரின் கவிதைகளை, பொதுமக்களிடம் கொண்டுசேர்த்த வ.ராமசாமி ஐயங்கார்., ஜீவா, பாரதிதாசன் வரிசையில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சீதாராமுக்கும் வலுவான இடம் உண்டு என்பதை ஆவணப்படம் சுட்டுகிறது. இலக்கிய நுட்பங்களை அறிந்திருந்தது போலவே இசையின் நுட்பங்களையும் புரிந்துவைத்திருந்ததால், எழுத்தாகவும் உரையாகவும் அல்லாமல் தன் இனிய குரலால் பாரதியின் பாடல்களை உயிர்ப்புடன் பாடி அவற்றின் சாரத்தைப் பரப்பியிருக்கிறார் சீதாராம். பாரதியாரை நேரில் சந்தித்திராதபோதும் அவரது பாடல்கள் வழி அரும்பிய அதிசய உறவாக பாரதியார் - சீதாராம் உறவு இருந்திருக்கிறது. செல்லம்மா பாரதியின் உயிர் பிரிந்ததே சீதாராமின் மடியில்தான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் சீதாராமின் நெருங்கிய நண்பரும் தமிழறிஞருமான தி.ந.ராமச்சந்திரன்.

சீதாராமின் தனிநபர் கவிதை வாசிப்பை 1967-ல் நேரில் கேட்ட எழுத்தாளர் அசோகமித்திரன், கவிதை வாசிப்பைத் தான் அனுபவித்த மிகச் சில சந்தர்ப்பங்களில் இது ஒன்று என்கிறார். புதுக்கவிதைகளைக்கூட உள்ளார்ந்து ரசித்து வாசித்தார் சீதாராம் என வியக்கிறார் அவர். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை தயாரித்திருக்கும் இந்த ஆவணப்படத்தில், கரிச்சான்குஞ்சு, க.நா.சு, தி.ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன், ஜெயகாந்தன் போன்றோரின் மேற்கோள்கள், பாரதியார், பாரதிதாசன், திருலோக சீதாராம் ஆகியோரின் பாடல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி திருலோக சீதாராமின் இலக்கிய வாழ்க்கையையும் லௌகீக வாழ்வின் சில தருணங்களையும் காட்சிச் சித்தரிப்புகளின் உதவியுடன் விவரித்திருக்கிறார் ரவிசுப்பிரமணியன்.

டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்களும் சிபி சரவணனின் ஒளிப்பதிவில் நிலக்காட்சிகளும் இயற்கை அழகின் பின்புலமும் சீதாராமின் காலத்து நிகழ்வுகளைச் சித்தரிக்கும் காட்சிகளில் ரவிசுப்பிரமணியனுக்குப் பெருமளவில் உதவியுள்ளன. ஆவணப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ஆழமான இசை அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன. திவாகர் சுப்பிரமணியன் இசையில் ஒலிக்கும் பாரதியார் பாடல்களின் மெட்டுகளும் ‘ஆத்திசூடி இளம்பிறை அணிந்து’ எனத் தொடங்கும் சர்வ சமயப் பிரார்த்தனைப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதமும் ஆவணப் படத்துக்கு வேறு வண்ணங்களை அளிக்கின்றன.

பாரதி போலவே அவரின் தாசரான பாரதிதாசனையும் பிரியத்துடன் நேசித்திருக்கிறார் சீதாராம். பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ நூலை முழுவதும் மனப்பாடம் செய்து சீதாராம் மேடையில் நிகழ்த்தும் உரையை வியந்தோதுகிறார் பாரதிதாசனின் புதல்வர் மன்னர் மன்னன். அந்த உரையைக் கேட்ட அனுபவத்தை மெயிசிலிர்க்க விவரிக்கிறார் சீதாராமின் சீடர் சக்தி சீனுவாசன். பாரதிதாசனுடன் முரண்பட நேர்ந்த ஒரு சமயத்தில் சீதாராம், “அய்யா கவிஞரே நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை ஆனால் உமது கவிதைகள் எங்களுக்குத் தேவை” எனக் கூறி பாரதிதாசனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அந்த முரண்பாட்டுக்குப் பின்னர் பாரதிதாசன், பக்கத்து வீட்டிலிருந்து பிராமணரான சீதாராமுக்குத் திருநீறு வாங்கித் தரச் செய்திருக்கிறார். சீதாராமும் அங்கே விருந்து உண்டிருக்கிறார். திராவிட இயக்கத் தலைவரான அண்ணாத்துரை, ‘அக்ரஹாரத்து அதிசயப் பிறவிகளில் இவரும் ஒருவர்’ என சீதாராமைப் பாராட்டியிருக்கிறார். கொள்கை மாறுபாடு, கருத்து முரண்பாடு போன்றவை தனிநபர்களின் உறவையும் கலா ரசனையையும் சிறிதும் சேதாரப்படுத்தவில்லை. இந்தப் பண்பு இப்போது என்னவாகியிருக்கிறது எனச் சிந்திக்கத் தூண்டுகிறது படம்.

சுரதா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் முதல் படைப்பை வெளியிட்டது சீதாராமின் சிவாஜி இதழே. தன் படைப்புகளைப் பிரசுரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டாமல் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறார் சீதாராம். இப்படியான தகவல்கள் பொதிந்த இந்த ஆவணப் படம் மூலம் நம் மனதில் உருவாகும் சீதாராம் குறித்த பிம்பத்தில் இலக்கியம் சார்ந்த, தனிநபர் மாண்பு சார்ந்த பெருமிதம் நிரம்பி வழிகிறது. எப்படிப்பட்ட ஆளுமை அவர் என்னும் வியப்பு மேலிடுகிறது. திருலோக சீதாராம் பற்றிய விமர்சனக் கருத்துகள் ஆவணப்படத்தில் இல்லையென்றாலும், பார்வையாளர்களிடம் அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 7 தி இந்து நாளிதழில் வெளியானது

Sunday, February 7, 2016

பினாமி மூலம் வீட்டுக் கடன் பெறுகிறீர்களா?


நடுத்தரவர்க்கத்தினரின் வீட்டுக் கனவை நனவாக்குவதில் வீட்டுக் கடனுக்கு முக்கியப் பங்குண்டு. வீடு வாங்க விரும்புவர்களின் நினைவுக்கு முதலில் வருவது வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்கள்தான். நகரங்களிலும், மாநகரங்களின் புறநகர்ப் பகுதியிலும் விரைந்து எழுப்பப்பட்டுவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கவும், கிராமப் பகுதிகளில் தனி வீடுகளை வாங்கவும் பெரும் துணை புரியும் இந்த வீட்டுக் கடன்களை சில பினாமி நபர்களும் பெற்றுவிடுகிறார்கள் என்பது தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் புகார்.

பினாமிக் கடன் (Ghost Loan) எனப்படுவது இரண்டு விதங்களில் பொருள்படுத்தப்படுகிறது. ஒன்று வங்கியின் பதிவேடுகளில் மட்டும் காணப்படும் கடன், அந்தக் கடனை யாருமே பெற்றிருக்க மாட்டார்கள். மற்றொன்று உண்மையான பயனாளி யாரோ ஒருவராக இருக்க மற்றொருவரின் பெயரில் கடன் பெறப்பட்டிருக்கும். இந்த பினாமிக் கடன் பற்றிய தொடர்ந்து எழுப்படும் சந்தேகங்கள் தொடர்பாக சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முத்ராவிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.

பினாமிக் கடன் விவகாரத்தை ரிசர்வ் வங்கி மிகக் கவனத்துடன் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், இது தொடர்பாக புகார் எதுவும் வரும்போது அந்தப் புகார் மீது விரிவான விசாரணை மேற்கொண்டு உண்மையை அறிய முடியும் என்றும் தெரிவித்தார்.

வீட்டுக் கடன்களில் பினாமிக் கடன்கள் தொடர்பான புகார்கள் எழும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எழுந்த கேள்விக்குப் பதில் தெரிவிக்கும்போது, வீட்டு வசதித் துறையின் விவகாரங்களைப் பொறுத்தவரையில் அந்தப் பொறுப்புகளைத் தேசிய வீட்டுவசதி வங்கியே அதைக் கவனித்துவருவதாகவும் ஆனால் வீட்டுக் கடனை ரிசர்வ் வங்கி கவனித்துவருவதாகவும் முத்ரா தெரிவிக்கிறார்.

வீட்டுக் கடன் விவகாரங்களை மிகவும் கவனமாக ரிசர்வ் வங்கி கவனித்துவருகிறது என்றும், அதிக அளவிலான புகார்கள் வரவில்லை என்றும் அது தெரிவித்திருக்கிறது. வீட்டுக் கடன்களைப் பொறுத்தவரை செயலூக்கம் பெறாத முதலீடுகள் மிகவும் சொற்பமே என்று குறிப்பிடும் ரிசர்வ் வங்கி, வங்கிக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் நிலையில் அவை இல்லை என்பதையும் அது தெரிவிக்கிறது.

ஆனால் ரிசர்வ் வங்கிக்குப் பெரும் தலைவலியாக மாறிவிடும் அளவுக்கு பினாமிக் கடன்கள் பெருகி செயலூக்கம் பெறாத முதலீடுகளாக அவை திரண்டுள்ளன என்று கூறப்படுகிறது. கட்டுநர்கள் கடன் வாங்குவதற்காக டம்மியான நபர்களை ஏற்பாடு செய்வதாகவும், அவர்கள் வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்து, வங்கிக் கடன் பெற்ற பிறகு அந்தத் தொகை டம்மிகளிடமிருந்து கட்டுநர்களுக்குச் சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக டம்மியான நபர்கள் கமிஷனாக சுமார் 4-6 சதவீதத் தொகையைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிகிறது. கோடிக்கணக்கான தொகையை முதலீடாகப் பெற கட்டுநர்களுக்கு இப்படியான டம்மி நபர்களை ஏற்பாடு செய்யும் தரகர்கள் அல்லது நிதிநிறுவனர்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி நிதி திரட்டி கட்டுமானங்களை உருவாக்கும் கட்டுமான அதிபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இத்தகைய கடன்கள் பெற்று அடுக்குமாடிகளை உருவாக்கும்போது அது இந்தத் துறையை வளர்க்க உதவாது என்றும் வீட்டுக் குடியிருப்பு உருவாக்கும் திட்டங்களை மேற்கொள்ளும் கட்டுநர்களைத் தொடர்ந்து தள்ளாட்டத்திலேயே வைத்திருக்கும் என்றும் கட்டுமானத் துறையின் நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால் கட்டுநர்கள் இப்படியான குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை கமிஷனுக்குப் பெறுவது என்பது வர்த்தக நோக்கில் பயனற்றது என்றும் வீட்டுக் கடன் வழங்கல் வங்கிகளின் பாதுகாப்பான முதலீடு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

தற்போது ரியல் எஸ்டேட் துறை அவ்வளவு வலுவாகவும் வசதியாகவும் இல்லாத நிலையில், தங்களவது வர்த்தக பரிவர்த்தனைகளை மேம்படுத்த நிதி திரட்டுவதில் கட்டுநர்கள் ஆர்வம்காட்டி வரும் சூழலில் இதைப் போன்று எழும் குற்றச்சாட்டுகளில் ரிசர்வ் வங்கி முழுக் கவனத்தையும் செலுத்தி ஆராய வேண்டும் என்றே ரியல் எஸ்டேட் துறையின் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிப்ரவரி 6 தி இந்து நாளிதழில் வெளியானது

Saturday, February 6, 2016

சும்மா அதிருதுல்ல...!


பயங்கரவாதத் தாக்குதலை அடிப்படையாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணிப் படங்களை உருவாக்குவது ஹாலிவுட்டுக்குக் கைவந்த கலை. வெள்ளை மாளிகைமீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படமாக 2013-ல் வெளியானது ஒலம்பஸ் ஹேஸ் ஃபாலன் என்னும் திரைப்படம். இரண்டு மடங்குக்கு மேல் வசூலை வாரிக் கொடுத்த இந்த ஹாலிவுட் படத்தின் தொடர்ச்சியாக வரும் மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது லண்டன் ஹேஸ் ஃபாலன் என்னும் ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்.

இங்கிலாந்து பிரதமரின் இறுதிச் சடங்கு லண்டனில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அனைவரும் அங்கே திரண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அங்கே வருகை தந்திருக்கும் உலகத் தலைவர்களை ஒழித்துக்கட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்று திட்டமிடுகிறது. லண்டன் நகரமே போர்க்களம் போல் மாறிவிடுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத திகில் நிமிடங்களில் மூழ்கிக் கிடக்கிறது லண்டன். அமெரிக்க உளவுத் துறையுடன் இணைந்து பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கும் பெரும் பொறுப்பை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொள்கிறார்.

அமெரிக்க அதிபருக்கு பிரிட்டிஷ் உளவுத் துறையும் உதவுகிறது. ஆனால் பிரிட்டிஷ் உளவுத் துறையின் ஏஜெண்ட் யாரையும் நம்பத் தயாராக இல்லை. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் அந்தப் பொறுப்பை எப்படி எதிர்கொள்கிறார்? தாக்குதல் திட்டம் வெற்றிபெறுகிறதா? தலைவர்கள் காப்பாற்றப்படுகிறார்களா? என்ற கேள்விகளுக்கான பதில்களை ஆக்‌ஷன் கலந்து த்ரில்லராகத் தந்திருக்கிறார் இயக்குநர் பபேக் நஜாபி. ஈரானில் பிறந்த பபேக் சுவீடனில் அகதியாகத் தஞ்சமடைந்தவர்.

அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் மைக் பேனிங் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரார்டு பட்லர். அமெரிக்காவின் அதிபராக நடிகர் ஏரோன் எக்ஹார்டும் துணை அதிபராக நடிகர் மோர்கன் ஃப்ரீமேனும் வேடமேற்றிருக்கிறார்கள். 10.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் டிரெயிலர் வெளியானது இதுவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள். இது வெறும் டிரெய்லர்தான் அதைப் பார்த்தாலே சும்மா அதிருது எனும்போது மெயின் பிக்சரைப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

பிப்ரவரி 5 தி இந்து நாளிதழில் வெளியானது

Saturday, January 30, 2016

மறுபடியும் ஒரு டைட்டானிக்?


கடல், கப்பல் இவற்றுடன் காதலையும் இணைத்து படமாக்கப்பட்ட ‘டைட்டானிக்’ போல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அநேக திரைப்படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளன. அந்த வரிசையில் வரும் மற்றொரு ஹாலிவுட் படம் ‘த ஃபைனஸ்ட் ஹவர்ஸ்’. அமெரிக்க எழுத்தாளர் கேஸி ஷெர்மன் எழுதிய ‘த ஃபைனஸ்ட் ஹவர்ஸ்’ என்னும் நாவல் 2009-ல் வெளியானது.

1952-ல் கேப் காட் என்னும் கடலோரப் பகுதியில் கடும் புயலில் எஸ் எஸ் ஃபோர்ட் மெர்ஸர், எஸ் எஸ் பெண்டில்டன் என்னும் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மாட்டிக்கொண்டன. இவற்றில் மாட்டிக்கொண்டவர்களைக் கடலோரப் பாதுகாப்பு படையினர் எப்படி மீட்டனர் என்பதை இந்த நாவலில் கேஸி ஷெர்மன் சித்தரித்திருந்தார்.

இந்தக் கதைக்கு ஸ்காட் சில்வர், எரிக் ஜான்சன், பால் தாமஸி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களை நேர்காணல் செய்து அதன் அடிப்படையில் திரைக்கதையை செழுமைப்படுத்தியுள்ளனர்.

ஜாவியர் அகிர்ரெஸ்ரோப் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஆஸ்திரேலியா இயக்குநர் கிரிக் கில்லஸ்பி இயக்கியிருக்கிறார். கோயன் பிரதர்ஸ் படங்களில் அதிகமாக இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் கார்டர் பர்வெல் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

க்ரிஸ் பைன், கேஸி அஃப்ளெக், பென் ஃபோஸ்டர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வால் டிஸ்னி பிக்சர்ஸும், விடேகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். மாசாசுஸெட்ஸ் மாகாணத்தின் குய்ன்ஸி நகரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பதைத் தொடங்கி நடத்தியுள்ளார்கள்.

கடும் புயல்.. சுழன்று சுழன்று வீசும் காற்றுக்கு நடுவில் தாறுமாறாக எகிறும் அலைகளில் மாட்டிக்கொண்ட கப்பல்கள் உள்ளே கடல் நீர் அதிவேகத்தில் புகுந்துவிட்ட நிலையில் அது முழுவதும் மூழ்குமா தப்பிக்குமா என்னும் பதைபதைப்பை உருவாக்கும் வகையில் படம் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். துணிச்சலுடன் மீட்புப் படையினர் மேற்கொள்ளும் சாகச சம்பவங்களும் பயணிகளின் பரிதவிப்பும் ரசிகர்களை வியப்பின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்திவிடும்போல.

இசையும் படமாக்கமும் தந்திருக்கும் தத்ரூபத்தால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் புயலில் மாட்டிய கப்பல்கள் நம் கண் முன்னே மீண்டும் ஆழிப் பேரலையில் மாட்டிக்கொண்ட உணர்வு ஏற்படுகிறது. டிரெயிலரைப் பார்க்கும்போதே நடுக்கடலில் கடும் புயலில் மாட்டித் தவிப்பது போன்ற உணர்வு வருகிறது. முழுப் படமும் பார்த்தால் 1952- ம் ஆண்டுக்கே போய்விடுவோம் என்றுதான் தோன்றுகிறது.

ஜனவரி 29 தி இந்து நாளிதழில் வெளியானது

Sunday, January 24, 2016

ரியல் எஸ்டேட்டுக்கு சாதகமான நகரங்கள்


உலகில் விரைவாகப் பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இந்தியா முதன்மையானது. இதன் பெரு நகரங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. இவை இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமையைப் பெற்றுத் தந்துவருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தப் பெரு நகரங்கள் பெரிய அளவில் கைகொடுத்து வருகின்றன. மாநிலங்களின், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து இந்தப் பெரு நகரங்களுக்கு அநேகர் குடிபெயர்ந்துள்ளனர். வேலை வாய்ப்பு போன்ற தேவைகளின் காரணமாக இவர்கள் இடம்பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஆகவே பெரு நகரங்களில் விரைவாக நகரமயமாக்கம் நடைபெற்றது. ரியல் எஸ்டேட் துறைக்கு இங்கே நல்ல அறுவடை கிடைத்தது. ஆனால் தேவையான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் எல்லாமே அமைந்துவிட்ட நிலையில் அது கிட்டத்தட்ட உச்சபட்ச நிலையை அடைந்துவிட்டது. இனியும் பெரு நகரங்களை மட்டும் சார்ந்து ரியல் எஸ்டேட் துறையினர் செயல்படும் நிலை இல்லை. ஏற்கனவே அவர்கள் பெரு நகரங்களை ஒட்டிய புற நகர்ப் பகுதியிலேயே தங்கள் கவனத்தைச் சில ஆண்டுகளாக செலுத்திவருவதும் கண்கூடு.

பெருநகரங்களில் நிலங்களின் விலையும் தொழிலைத் தொடர முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது. காலி நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக மாற்றி விட்ட பின்னர், எங்கேயோ கிடைக்கும் அரிதான ஒரு சில காலி நிலங்களின் விலை தாறுமாறாக எகிறிவிடத் தானே செய்யும்? இது போக கடுமையான போக்குவரத்து நெரிசல், மாசுபாடான சூழல் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் சவால்களாக மாறியுள்ளன.

இவற்றை எல்லாம் ரியல் எஸ்டேட் துறையினர் சமாளித்துவந்த போதிலும் பெரு நகரங்களை விட்டுவிட்டு அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நகரங்களில் அவர்களது கவனத்தைச் செலுத்தினால் அங்கே அவர்கள் வளர்ச்சி காண வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் திட்டமான 2022-க்குள் எல்லோருக்கும் வீடு போன்றவையும் ரியல் எஸ்டேட்டுக்குக் கைகொடுக்கக் காத்திருக்கிறது. இந்நகரங்களில் நிலங்களின் விலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சகாயமாகவே உள்ளது; உள் கட்டமைப்பும் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறது. அப்படியான சில நகரங்கள், அங்கே ரியல் எஸ்டேட்டுக்குச் சாதகமான சூழல் ஆகியவற்றைப் பற்றி ஜேஎல்எல் ரியல் எஸ்டேட் துறை ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடுத்தர மக்கள் வீடு வாங்குவதற்குத் தகுதியான மலிவு விலை வீடுகள் கொண்ட 10 நகரங்களை இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் தென்னிந்தியாவைச் சேர்ந்த, கோயம்புத்தூர், ஹைதராபாத், கொச்சி ஆகிய மூன்று நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

முதலில் கோயம்புத்தூர்:

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய தொழில் மையம் கோயம்புத்தூர். இங்கே தொழில் தொடங்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகைகூட வழங்கப்படுகிறது. இங்கே உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அரசு உதவுகிறது. ஆகவே அதிகரித்து வரும் குடியிருப்பு தேவை காரணமாக ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ், அவினாசி ரோடு போன்ற நகரின் பிரதானப் பகுதிகளில் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் இங்கே வீடுகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஓய்வுபெற்ற பின்னர் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க ஏற்ற நகரம் இது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அத்துடன் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சம்பாதிக்கும் இளைஞர்களும் இந்த நகரத்தில் முதலீடு செய்வதை விரும்புகிறார்கள். மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இங்கு முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை. சென்னை போல இன்னும் நெருக்கடி இல்லாத நிலையில் இங்கு அன்றாட வாழ்க்கைச் சுலபமாக இருக்கிறது. இந்தக் காரணங்களால் தனி வீடு, அடுக்குமாடி வீடு என அனைத்துக்கும் இங்கே தேவை இருக்கிறது என்கிறார்கள் கட்டுமானத் துறையை உற்றுக் கவனிப்பவர்கள்.

ஹைதராபாத், தெலங்கானா:

உலக அளவிலான பொருளாதாரச் சரிவு, உள்ளூர் அரசியல் சூழல் போன்ற காரணங்களால் தொடர்ந்து மந்தமாக இருந்த ஹைதராபாத்தின் சந்தைச் சூழல் இப்போது மேம்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ரியல் எஸ்டேட் துறைக்கான வாடிக்கையாளர்கள் பெருகியுள்ளனர். குடியிருப்புகள், வணிக வளாகங்களின் போன்றவற்றுக்கான தேவை அங்கே அதிகரித்திருப்பதே இதற்குச் சான்று.

ஹைதராபாத்தின் பிரதான பகுதிகளில்கூட ஒரு அடுக்குமாடி வீட்டை சுமார் 30-லிருந்து 50 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம் என்கிறார்கள். சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் நிலவும் விலையில் 60 சதவீதமே இங்கு வீட்டின் விலை எனச் சொல்லப்படுகிறது. மாநிலம் புதிதாக உருவாகியிருப்பதால் இங்கு ரியல் எஸ்டேட் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளதாக நம்பப்படுகிறது.

கொச்சி: கேரள மாநிலத்தின் புராதனமான நகரமான கொச்சியில் நவீன வாழ்வும் வசதிகளும் ஊடுருவத் தொடங்கியுள்ளன. கொச்சியில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி உயரத் தொடங்கியபோது கொச்சிக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. நகரத்தில் மட்டுமல்ல அதன் எல்லையை ஒட்டிய பகுதியான பலாரிவட்டம், காக்கநாடு, எடப்பள்ளி போன்ற இடங்களில்கூட மக்கள் பரவ ஆரம்பித்தனர்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் கொச்சி இடம்பெற்றதால் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படும் சூழலும் உருவாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் இங்கே அதிகரித்துவரும் சூழலில் அவற்றின் தேவைகளைப் பூர்த்திசெய்ய ரியல் எஸ்டேட் துறையினரின் பங்களிப்பு அவசியமாகிறது.

ஒரு காலத்தில் வசதி நிறைந்தவர்களை மட்டுமே வாடிக்கையாளர்களாக நம்பி இருந்தது இந்நகரின் ரியல் எஸ்டேட் துறை. ஆடம்பர குடியிருப்புகளின் உருவாக்கமே அதிகமாக இருந்தது. இன்று நிலை அப்படியல்ல. நடுத்தர வகுப்பினர் வாங்கும் விலையுள்ள குடியிருப்புகளே ரியல் எஸ்டேட் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. நகரின் குடியிருப்புத் திட்டங்களில் 60 சதவீதமானவை விலை மலிவுக் குடியிருப்புகளே.

இந்தத் தென்னிந்திய நகரங்களைப் போல குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத், மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர், நவி மும்பை, புனே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், டெல்லியின் காஸியாபாத் போன்ற நகரங்களிலும் ரியல் எஸ்டேட் துறைக்கு வளமான எதிர்காலம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரு நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை அதன் உச்சபட்ச அளவை எட்டிய நிலையில் அடுத்த நிலையில் உள்ள மேற்கண்ட நகரங்கள் அந்தத் துறையினருக்கு கைகொடுக்கின்றன என்பதை மிகவும் ஆரோக்கியமான சேதியாகப் பார்க்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.

ஜனவரி 23 தி இந்து நாளிதழில் வெளியானது