Monday, April 21, 2014

தொங்கும் தூண் கொண்ட கோட்டை

(2014 ஏப்ரல் 20 அன்று தி இந்துவில் வெளியானது) 


வரலாற்றுப் பெருமையின் மௌன சாட்சியாக நிற்கிறது தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான்தான் இந்தக் கோட்டையை நிர்மாணித்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தர்மபுரி மாவட்டம் சங்க காலத்தில் தகடூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. தகடூரை ஆண்ட அதியமான் மாபெரும் போர்வீரர். அதியமானின் சிறப்பைப் பாடி புலவர்கள் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். இப்படி வந்த புலவர்களில் ஒருவர்தான் ஔவையார்.

தர்மபுரிதான் அதியமானின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மன்னர் அதியமானின் தலைமையிடமாக அதியமான் கோட்டை செயல்பட்டுள்ளது. தர்மபுரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனத் தொல்லியலாளர்களும் வரலாற்றறிஞர்களும் தெரிவிக்கிறார்கள். இப்போது சில பகுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தக் கோட்டை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது இந்தக் கோட்டையிலிருந்து பழைய நாணயங்கள் முதலானவை வெளியுலகிற்குத் தெரியவருகின்றனவாம். அதியமான் கோட்டைதான் தகடூர் நகரின் நுழைவாயிலாக இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதியமான் கோட்டையின் நுழைவாயில் மிகப் பெரியதாக இருந்துள்ளது. கோட்டை மதிலில் எதிரிகள் ஏற முடியாதபடி மதிலின் வெளிப்புறச் சுவரில் கடுகு எண்ணெய்யைப் பூசியுள்ளார்கள். இந்தக் குறிப்புகள் எல்லாம் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கியக் கோவில் சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் வெளிப்புறக் கல்சுவரில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுதான் அதியமானின் முத்திரை எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோவில் தவிர, பைரவர், அங்காளம்மன், நரசிம்மர், காளியம்மன் ஆகிய கோவில்களும் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளன. இந்தக் கோட்டையில் படைவீரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. கோட்டையின் மண்டபங்களில் மேற்புறச் சுவரில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கவனமின்றி சில ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டுவிட்டன. இந்த ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் தாம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஓவியங்கள் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்றறிஞர்கள் சொல்கிறார்கள்.

அதியமான் கோட்டையிலுள்ள மகா மண்டபத்தின் தொங்கும் கல்தூண்கள் கட்டடக் கலையின் அதிசயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் இரண்டு டன்கள் எடை கொண்டவை. இவை தரையைத் தொட்டு நிற்கவில்லை. இந்தக் கோட்டை பழங்காலச் சின்னமாக இருப்பதால் அதியமான் கோட்டம் என்னும் பெயரில் இந்தக் கோட்டையைத் தமிழக அரசு பாதுகாக்கிறது. இந்தக் கோட்டத்தில் அதியமான், ஔவையார் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

Sunday, April 13, 2014

குளு குளு மர வீடுகள்

(2014 ஏப்ரல் 12 அன்று தி இந்துவில் வெளியானது) 


நமது முன்னோர்கள் வீடுகளைப் பெரும்பாலும் களிமண், சுண்ணாம்பு, கல், மரம் போன்ற இயற்கையான பொருள்களைக் கொண்டே கட்டினார்கள். வெப்பமான நமது சூழலுக்கு ஏற்றவாறான வீடுகளைக் கட்டி அதில் தான் அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். வீடு கட்டவும் அலங்காரங்களுக்கும் மரங்களை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். மரப் பலகைகள் சூட்டைக் கடத்தாது, தடுத்துவிடும். எனவே அதிகமான சூடு வெளியில் இருந்தாலும் வீட்டின் உள்ளே வெப்பம் வராது. கோடைகாலத்தில் வீடு குளுகுளுவென்றிருக்கும், குளிர்காலத்திலோ கதகதப்பாக இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் நமது வீட்டின் அமைப்பு மாறிவிட்டது. நவீனக் கட்டுமானப் பொருட்களும் பெருகிவிட்டன. அதிகப் பொருட்செலவில் முழுக்க சிமெண்டையும் இரும்பையும் கண்ணாடியையும் பயன்படுத்தி வீடுகளை உருவாக்குகிறோம். இதனால் வீடுகளில் மரங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. பழைய வீடுகளின் கதவுகளையும் உத்திரங்களையும் நினைவுபடுத்திப் பாருங்கள். நவீன வீடுகளின் உருவாக்கத்தில் உபயோகமுள்ள மரத்தை மறந்துவிட்டோம். பசுமையான சூழலை வீட்டிற்குத் தரும் மரங்களை விட்டு விலகிவிட்டோம். ஆனால் பழைய வீடுகளைப் பார்க்கும்போது பலருக்கு ஏக்கமாக உள்ளது. கடந்த காலத்தை விட்டு நீண்ட தூரம் வந்துவிட்டாலும் அந்தப் பழங்கால உத்தியை இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தி வருகிறார் கட்டடக் கலை நிபுணர் ரவீந்திர குமார்.

இவர் பெங்களூருவில் உள்ள ப்ரகுருப் (Pragrup) என்னும் கட்டட நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பாளர். மரத்தாலான வீடுகளை இவர் உருவாக்கிவருகிறார். மர வீடுகள் மட்டுமல்ல மரத்திலேயேகூட வீடு கட்டித் தருகிறார் ரவீந்திர குமார். உங்களுக்குத் துணிச்சலும் வித்தியாசமான விருப்பமும் இருந்தால் மரத்தின் மீது கட்டப்படும் வீட்டில் குடியிருக்கலாம். இது வரை சுமார் 20 மர வீடுகளை ரவீந்திர குமார் உருவாக்கியுள்ளார். இவை அனைத்துமே தனித்துவமானவை. ஒவ்வொன்றும் பிரத்தியேகமான வடிவமைப்பைக் கொண்டவை. ஆனால் அனைத்து வீடுகளுக்குமான பொதுவான அம்சங்கள் அவற்றின் அழகும் பசுமையான சூழலும்.

உங்களது சொந்த வீட்டை உருவாக்குங்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இவர் வீடுகளைக் கட்டுகிறார். இதனடிப்படையில் மரப் பலகைகளை வைத்துப் பண்ணை வீடுகள் போல் பசுமையான சூழலில் வீடுகளை அமைக்கும் முயற்சியில் இவர் ஈடுபடுகிறார். இவரது வீடுகளில் பாதங்கள் அதிகமாகத் தரையைத் தொட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் முழுக்க முழுக்க மரங்கள் தாம் வீட்டை ஆக்கிரமித்து நிற்கும். சுவர்கள், கூரைகள், தளங்கள் என அனைத்துமே ஏதாவது ஒரு மரத்திலிருந்து அறுக்கப்பட்ட பலகையாகவே இருக்கும். ரவீந்திர குமார் ஒரு வீட்டை மரத்தின் மீதே கட்டியுள்ளார். இந்த வீட்டை இவர் கமுகு மரத்தின் பட்டை, பழைய ரயில் தண்டவாளங்களை மறுசுழற்சி செய்து தயாரான இரும்புப் பட்டை ஆகியவற்றைக் கொண்டு கட்டினார். கமுகு மரத்திலிருந்து கிடைக்கும் பலகைகள் நீண்ட கால ஆயுள் கொண்டவையாம். இவை நூறு ஆண்டுகள் வரை கூட அப்படியே இருக்குமாம்.

இருபது வயது கொண்ட தூங்குமூஞ்சி மரத்தின் இரண்டு கிளைகளுக்கு மேலே இந்த மர வீடு தூக்கி நிறுத்தப்பட்டிருக்கிறது. அடி மரத்திலிருந்து பிரிந்து செல்லும் இரண்டு கிளைகள் தான் வீட்டைத் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. அந்தரத்தில் இருப்பது போல் தோற்றம் கொண்டாலும் மரம் வாயிலாக நிலத்தின்மீது நன்கு ஊன்றியபடி இந்த வீடு கம்பீரமாக நிற்கிறது. இதன் கதவுகள், சன்னல்கள், படிகள், அறைக்கலன்கள் அனைத்தும் மரத்தாலானவை. ஒருவேளை இயற்கைச் சீற்றத்தால் இந்த வீடு இடிந்துவிழுந்தாலும் இதன் பொருட்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மட்கிவிடும் என்கிறார் ரவீந்திரா. இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. வீட்டின் கூரை மீது சுடு மண்ணாலான டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளன. இடவசதித் தேவைக்கேற்ப பக்கவாட்டில் நகரும் கதவுகளை அமைத்து அறைகளைப் பிரித்துள்ளார் ரவீந்திரா. மேற்கூரையில் புற்களை வேய்ந்துள்ளார்.

இந்த வீட்டின் வடிவம் பிரமிடைச் சாய்த்துவைத்தது போன்று உள்ளது. வீட்டின் சுவரைக் கல்லால் கட்டி யிருப்பதாலும் அதிகப்படியான மரத்தின் பயன்பாட்டாலும் பசுமையான உணர்வை இந்த வீடு அளிக்கிறது. வெளிப்புறச் சுவரின் மீது கமுகின் மேற்பட்டையை ஒட்டி அழகூட்டியிருப்பதால் பசுமை உணர்வு தூக்கலாகத் தெரிகிறது. குளுகுளு வீட்டை விரும்புவர்களின் மனதை விட்டு அகலாதவை இந்த மர வீடுகள்.

Tuesday, April 8, 2014

நோய்களை ஒழிக்க முடியுமா?

(2014 ஏப்ரல் 7 அன்று தி இந்துவில் வெளியானது)


தப்பித்தவறிக் கைபட்டாலே உயிரிழந்துவிடும் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்களைத் தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இது 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ல் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் 1950 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ல் உலக சுகாதார தினத்தை அந்நிறுவனம் கொண்டாடிவருகிறது.

உலக சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதே உலக சுகாதார நாளின் முதன்மை நோக்கம். ஒவ்வொரு வருடமும் ஒரு முழக்கத்தை முன்வைத்து இந்த நாளை உலக சுகாதார நிறுவனம் அனுசரிக்கிறது. இந்த ஆண்டு கொசுக்கடிக்கு எதிரான போராட்டமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே சிறிய கடி பெரிய அச்சுறுத்தல் என்னும் முழக்கத்தை அது முன்வைத்துள்ளது.

ஆண்டுதோறும் 100 கோடிப் பேர் கொசு, ஈ போன்றவை பரப்பும் மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சுமார் 250 கோடிக்கு மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயால் எளிதில் தாக்கப்படுகின்றனர். சமீபத்தில் சீனா, போர்ச்சுகல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் போன்ற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் மலேரியா நோய் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பரவியுள்ளது.

போதுமான சுகாதார வசதியுடன் கூடிய குடியிருப்பு, குடி நீர் போன்ற வசதிகள் கிடைக்காத எளிய மக்களே இந்த வியாதிகளால் அதிகம் பாதிப்படைகிறார்கள். 21-ம் நூற்றாண்டில் ஒருவர்கூட கொசுக் கடியால் உயிரிழக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. ஆரோக்கியமான இருப்பிடம், சுகாதாரமான குடிநீர் போன்றவை அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த நோய்கள் காணாமல் போய்விடும். அந்த நிலைமையைக் கொண்டுவரும் நோக்கத்தில் உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டுவருகிறது என்பதே நமக்கான ஆறுதல்.

Sunday, April 6, 2014

காற்றோட்டமான வீடு வாங்குகிறீர்களா?

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


வீடு என்பது வெறும் சொல்லல்ல. அது பலருக்குப் பெரும் கனவு. சம்பாத்தியமே போனாலும் கவலையில்லை நல்ல வீடு கிடைத்தால் போதும் என்பது தான் பலரது எதிர்பார்ப்பு. ஆக அப்படி ஒரு வீடு வாங்கும்போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு வீடு போன்று மற்றொரு வீடு இருக்காது.

எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் ஒரே மாதிரி தோன்றும் வீடுகளின் விலை வேறுபட்டிருக்கும். வீடு வாங்கும்போது அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நாம் கொஞ்சம் பணத்தைச் சேமிக்கலாம். விலை அதிகம் எனில் எப்படிச் சேமிப்பதாம் எனக் கேட்கிறீர்களா? வீடு வாங்கும்போது வீட்டின் உள்ளே நன்கு கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப் புறத்தைப் போல் உள்புறமும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கிறதா எனச் சோதியுங்கள். வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் தேவையான அளவில் வருவதற்கு வசதியாக வீட்டின் உட்புறம் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள்.

அறைகளுக்கு அவசியமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும். முறையான வெண்டிலேஷன் அமைந்துள்ள வீட்டில் அநாவசியமாக விளக்கெரிக்க வேண்டாம். குளிர்சாதன வசதியைத் தேவையின்றிப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் கோடையில் மட்டும் தான் அந்த வீட்டிற்கு ஏ.சி. தேவைப்படும். இரவில் மட்டும் தான் விளக்கு தேவைப்படும். தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்குப் போதுமான குழாய் வசதி அமைந்திருக்க வேண்டும்.
மின் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கப் போதுமான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் வீட்டிற்குக் குடிபோகும் முன் கவனிக்கப்பட வேண்டியவை; இவற்றை எல்லாம் கவனிக்காமல் வீட்டிற்குக் குடிபோய்விட்டால் அதனால் அதிகச் சிரமம் ஏற்படும். நமக்குத் தேவையான விதத்தில் வீட்டை மாற்றியமைக்க நேரமும் பணமும் செலவாகும். இவை அநாவசிய விரயங்கள்.

பெரும்பாலும் வீட்டைத் தேர்வு செய்யும் முன்னர் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதா மார்பிள்ஸா கிரானைட்டா என்பதை எல்லாம் உடனே கவனித்துவிடுவோம். ஆனால் குளியலறையில் தேவையான வாஷ் பேசின் உள்ளதா என்பது போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் நன்றாக ஆராய்ந்துவிட்டே வீட்டை வாங்க வேண்டும். சில ஆயிரங்கள் குறைவு என்பதால் உட்புறம் முறையாக அமைக்கப்படாத வீட்டை வாங்குவது சரியல்ல. ஏனெனில் அவற்றைப் புதிதாக உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பலர் அவசரப்பட்டு வீட்டை வாங்கிவிட்டு உள் அலங்காரத்திற்கு அதிகச் செலவு செய்து அவதிப்படுவார்கள். அந்தத் தவறை நீங்கள் செய்துவிடாதீர்கள். வீடு என்பது நிம்மதிக்கானது. எனவே நிதானமாக வீடு வாங்கி நிம்மதியாகக் குடிபோங்கள்.

பேஸ்புக்கால் பிழைத்த உயிர்

(2014 ஏப்ரல் 5 அன்று தி இந்துவில் வெளியானது) 


சமூக வலைதலங்கள் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுகிறது என்னும் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி சமூக வலைதலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல செயல்களிலும் ஈடுபடுகின்றன. சமீபத்தில் கேரளாவில் ஃபேஸ்புக் மூலமாக இளம்பெண் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் அகலி என்னும் இடத்தில் வசித்துவருபவர் ரபிதா சுனில் குமார். அவர் அகலியிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளிகள். பிறந்ததிலிருந்தே அந்தப் பெண் இதய நோயால் அவதியுற்றுவருகிறார். ஒரு சில நாட்களுக்கு முன்னர் ரபீதா வகுப்பறையில் மிகவும் களைப்பாக இருந்திருக்கிறார்.

உடல்நிலை பாதிப்படைந்துள்ளதை உணர்ந்திருக்கிறார். எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ரபீதாவை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய நோய் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு இருந்ததால் அவர் தேர்வெழுதச் சென்றுள்ளார். தேர்வு எழுத அவர் விரும்பினாலும் உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. கடும் வலி காரணமாக அவரால் தேர்வைச் சரியாக எழுத முடியவில்லை. பாதியிலேயே வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அறுவைச் சிகிச்சை செய்தால் ஒழிய அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவரது பெற்றோர் அவரை அங்குள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதய நோய் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இரண்டு லட்சம் ரூபாய் செலவாகுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாதாரணக் கூலித் தொழிலாளர்களான அவருடைய பெற்றோருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மகளின் உயிரைக் காப்பாற்ற அவ்வளவு பணமில்லை என்பதால் கவலையடைந்துள்ளனர்.

நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது ரபீதாவின் குடும்பம். குடும்ப நண்பர்கள் ஏதாவது நன்கொடை திரட்டலாம் என யோசனை தெரிவித்தனர், அதற்கும் முயன்றனர். ஆனால் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக இல்லை. அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. குறுகிய காலத்தில் எப்படிப் பணத்தைப் புரட்டுவது என ரபீதாவின் பெற்றோர் கலங்கித் தவித்துப்போனார்கள்.

இப்படியான சமயத்தில் ரபீதாவுடன் படிக்கும் மாணவி ஒருவர் ரபீதாவின் நிலைமை பற்றி ஃபேஸ்புக்கில் சாயக்கடா என்னும் குழுவில் பதிவிட்டுள்ளார். அது வெறும் லைக்குகளும் கமெண்டுகளுமாகச் சாதாரணப் பதிவாக முடிந்துவிடவில்லை. அந்தப் பதிவுக்கு அதிகமான அளவில் ஆதரவு கிடைத்தது. அந்தக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது பங்காக ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரத்தைத் திரட்டிக் கொடுத்துள்ளனர். எல்லோரும் அவர்களாக விரும்பி வந்து உதவினார்கள் என சாயக்கடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மினி ஸ்ரீனிவாசன் கூறுகிறார்..

இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல இஸ்ரேல், அங்கோலா போன்ற நாடுகளில் வசிக்கும் உறுப்பினர்கள் சிலரும் இந்த உதவியில் கைசேர்த்திருக்கிறார்கள். உண்மையில் இஸ்ரேலில் உள்ள ஒரு உறுப்பினர்தான் இந்த உதவிப் பயணத்தைத் தொடங்கிவைத்தார் என ரபீதாவின் அம்மா பிந்து சுனில்குமார் சொல்கிறார். அதனால்தான் எங்களை மலைக்கவைத்த தொகையை ஒரு வாரத்திற்குள் புரட்ட முடிந்தது என்றும் அவர் சந்தோஷப்படுகிறார்.

ரபீதாவின் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. ரபீதாவுக்குத் தேவையான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவிட்டனர். ரபீதா மெல்ல மெல்ல இயல்பான நிலைக்குத் திரும்பிவருகிறாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ரபீதா மீண்டும் துள்ளித் திரியும் காலம் தொடங்கிவிட்டது.