Sunday, March 30, 2014

கண்ணோடு காண்பதெல்லாம்

(2014 மார்ச் 29 அன்று தி இந்துவில் வெளியானது)


பறப்பதற்கும் தண்ணீரில் நடப்பதற்கும் எல்லோருக்கும் ஆசை தான். ஆசை இருந்தாலும் அதைச் செயல்படுத்த எல்லோராலும் முடியாதே. ஒருசிலரால் தான் அற்புதங்களை நிகழ்த்த முடிகிறது. அப்படியொருவர் 2011 ஜூன் 25 அன்று லண்டன் தேம்ஸ் நதியின் மீது நடந்து சென்று மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் டைனமோ என்னும் புகழ்பெற்ற மாஜிக் நிபுணர். இதைப் போல மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். ஒரு முறை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உயரமான டைம்ஸ் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவரில் நடந்தே தரைக்கு இறங்கியுள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் லண்டனில் டபுள் டக்கர் பஸ்ஸின் கூரை மீது தரையிலிருந்து 15 அடி உயரம் - வலது கையைத் தொட்டபடி உடல் முழுவதையும் அந்தரத்தில் தொங்கவிட்டுவந்தார். கண்ணாடி வழியே ஊடுருவுவார். விரலைக் கையிலிருந்து ஒடித்து மீண்டும் பொருத்துவார். இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகளே.

சாதாரண மனிதன் நினைத்தே பார்க்க முடியாத சாகசச் செயல்களை அநாயாசமாகச் செய்து காட்டியுள்ளார் டைனமோ. ஹிஸ்டரி சேனலில் ஒளிபரப்பான இவரது மேஜிசியன் இம்பாஸிபிள் நிகழ்ச்சியை 24 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதற்குச் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி விருதும் இருமுறை கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி டிவிடி வடிவில் விற்பனையானபோதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவையெல்லாம் இவரது திறமைக்குச் சான்றுகள்.

ரசிகர்களால் டைனமோ என அழைக்கப்படும் ஸ்டீவன் பிரேய்ன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் 1982இல் பிறந்திருக்கிறார். இவரது தந்தை அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்றுவிடுவாராம். எனவே தாயின் பராமரிப்பில்தான் வளர்ந்துவந்திருக்கிறார். தந்தையின் இடத்தில் இருந்து இவரைப் பார்த்துக்கொண்டவர் இவருடைய தாத்தாவான கென். இவர்தான் டைனமோவின் ரோல் மாடல். இவரும் சிறு அளவிலான மந்திர தந்திர வித்தைகளில் ஈடுபட்டவர். இவரிடமிருந்து தான் மாயாஜால வித்தைகளை டைனமோ கற்றுக்கொண்டுள்ளார்.

2012இல் தாத்தா காலமானது தனது வாழ்வின் பெருந்துக்கம் என்கிறார் டைனமோ. தொடக்க காலத்தில் ஸ்டீவன் சீட்டுக் கட்டுகளை வைத்துப் பல தந்திர விளையாட்டுகளில் ஈடுபட்டுப் பார்ப்போரைக் கவர்ந்திருக்கிறார். இவருக்குப் பிடித்த கதாநாயகப் பாத்திரங்களில் ஒன்று சூப்பர் மேன். சூப்பர் மேனின் சாகசங்கள் எல்லாம் உண்மையானவை என நம்பியுள்ளார் இவர். டைனமோ என்ற பிரபலமான மாஜிக் நிபுணரானபோது தன்னையும் சூப்பர் மேன் போல் நினைத்துக்கொண்டே தந்திர நிகழ்ச்சிகள் ஈடுபட்டதாக இவர் சொல்கிறார்.

டீன் ஏஜில் ஏற்பட்ட குடல் அழற்சி நோயின் பாதிப்பையும் மீறி ரசிகர்கள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார் டைனமோ. சாதாரணமாக வீதியில் மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்திவந்த இவருக்கு இப்போது உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Saturday, March 29, 2014

அறுசுவைக் கலைஞன்

பிரகாஷ் ராஜின் பிறந்தநாளுக்காக (மார்ச் 26) எழுதப்பட்ட கட்டுரை. இதன் எடிட் செய்யப்பட்ட பிரதி 2014 மார்ச் 28 அன்று தி இந்துவில் வெளியானது.)


பாலசந்தரின் மோதிர விரலால் குட்டுப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். 1965 மார்ச் 26 அன்று பிறந்த பிரகாஷ் ராஜ் பாலசந்தரின் டூயட் படத்தின் விறுவிறுப்பான வில்லனாக அறிமுகமானார். பிரத்யேக உடல்மொழி, வனங்களை உச்சரிக்கும் பாணியில் தனித்துவம் என எளிதாக ரசிகர்களை வசீகரித்தார் பிரகாஷ் ராஜ். ஏற்கனவே கன்னடத்தில் நாடகங்களில் நடித்திருந்த அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. தமிழ்த் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பின்னர் 1995இல் கையளவு மனசு என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடித்ததால் தமிழ்க் குடும்பங்களுக்குப் பரிச்சயமான நடிகராக அவர் மாற முடிந்தது. 1995-96களில் வெளியான ஆசை, கல்கி ஆகிய திரைப்படங்கள் மூலமாக பிரகாஷ் ராஜ் முன்னணிக்கு வந்தார். வில்லனாக நடித்தாலும் கதாநாயகனுக்குச் சமமான வரவேற்பையும் பெற்றார். ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன் ஆகிய நடிகர்கள் வரிசையில் பிரகாஷ் ராஜுக்கு முக்கிய இடம் கிடைத்தது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் இரண்டு கதாநாயகர்களுள் ஒருவராக பிரகாஷ் தோன்றினார். திராவிட அரசியலில் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் உறவைச் சித்திரிந்திருந்த அந்தப் படத்தில் திமுக தலைவர் கருணாநிதி வேடமேற்றிருந்தார் பிரகாஷ் ராஜ். அந்தப் படம் வசூல்ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் பிரகாஷ் ராஜின் நடிப்புத்திறனுக்குச் சாட்சியாக இருந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என படு பிஸியான நடிகராக வலம் வந்தார் பிரகாஷ்.

வஸந்தின் அப்பு திரைப்படத்தில் அரவாணி வேடம் ஏற்று நடித்தார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடமேற்ற நடிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் இவரது நடிப்பு ஒரே பாணியில் தான் அமைந்துள்ளது என விமர்சனமும் உண்டு. சைக்கோத்தனம், நக்கல் நையாண்டி வசனம் இரண்டையும் கலந்து தனது கதாபாத்திரங்களுக்கு புது வடிவம் கொடுத்தார் பிரகாஷ் ராஜ். கில்லி படத்தில் இவரது உச்சரிப்பில் வெளியான செல்லம்… என்னும் வசனம் ரசிகர்களால் அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. வில்லனாக அறிமுகமானாலும் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். வித்தியாசமான படங்களைத் தர வேண்டும் என்னும் விருப்பத்தால் தானே தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் போன்ற படங்களை அதன் காரணமாகவே உருவாக்கினார். திரைப்படம் மீது கொண்ட தாகத்தால் தோனி என்னும் திரைப்படத்தை இயக்கி நடித்தார். பூலோகம், மத கஜ ராஜா, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

Tuesday, March 25, 2014

ஓரம்போ ஓரம்போ...

(தி இந்துவில் 2014 மார்ச் 24 அன்று வெளியானது)


சைக்கிள் நமது வாழ்க்கையோடு வாழ்க்கையாகப் பின்னிப்பிணைந்த வாகனம். சைக்கிளைப் பயன்படுத்துபவர்களில் 25 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்திற்கே அதைப் பயன்படுத்துகிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. வாரத்திற்கு 3 மணி நேரமோ 30 கிலோ மீட்டரோ சைக்கிள் பயணம் மேற்கொண்டால் இதயம் தொடர்பான வியாதிகளைத் தள்ளிவைக்கலாம் என நிபுணர்கள் சொல்கிறார்கள். உலகத்தில் சுமார் 100 கோடி சைக்கிள்கள் சாலையில் பயணிக்கின்றன என்றும் ஆண்டுதோறும் 10 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சைக்கிளைக் கண்டுபிடிக்கும் முயற்சி நீண்ட காலத்திற்கு முன்னரே தொடங்கியுள்ளது.

கிபி 1490இலேயே லியானார்டோ டாவின்ஸி ஏறக்குறைய சைக்கிள் மாதிரியான ஒரு வாகனத்தை வரைந்திருக்கிறார். ஆனால் சைக்கிளை முதலில் டி சிவ்ராக் என்னும் பிரெஞ்சுக்காரர் கிபி 1790இல் வடிவமைத்துள்ளார். இதில் பெடலோ ஸ்டியரிங்கோ கிடையாது. ஆனால் பார்ப்பதற்கு சைக்கிள் போலவே இருந்துள்ளது. இதைவிட மேம்பட்ட சைக்கிளை 1817இல் கார்ல் வான் ட்ரைஸ் என்னும் ஜெர்மன் பிரபு உருவாக்கியுள்ளார். இதிலும் பெடல் கிடையாது. கால்களைத் தரையில் ஊன்றித்தான் இழுத்துச் சென்றுள்ளார்கள். இதற்கு டிரைசைன் (Draisine) எனப் பெயர். இந்த வாகனத்தை 1818ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று இவர் பாரிசில் காட்சிக்கு வைத்துள்ளார். இந்த இருசக்கர வாகனம் தான் சைக்கிளை உருவாக்கச் சரியான வழியைக் காட்டியுள்ளது.

இதன் பின்னர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் 1839இல் நவீன சைக்கிளை வடிவமைத்துள்ளார். இந்த உருவாக்கமும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. சைக்கிள் உருவாக்குற முயற்சிக்கிடையில் பைசைக்கிள் என்னும் சொல் பிரான்ஸில் 1860இல தான் புழக்கத்திற்கு வந்துள்ளது. 

மேக்மில்லனைத் தொடர்ந்து 1863இல் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கொல்லரான எர்னஸ்ட் மிச்சௌ என்பவர் இரும்புச் சட்டம், மரத்தாலான சக்கரம் கொண்ட, ஓட்டுவதற்கு எளிதான சைக்கிளைத் தயாரித்துள்ளார். இவர் 1866இல் தொடக்ககால சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்தையும் அமைத்துள்ளார். மரச் சக்கரத்திற்குப் பதில் கெட்டியான ரப்பர் டயர் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் 1869இல் உருவாகியுள்ளது. ஆனால் காற்றடைத்த டயரை 1889இல்தான் உருவாக்கியுள்ளனர். சைக்கிள் வடிவம் ஓரளவு முழுமையான பின்னர் 1884இல் ஜே.கே.ஸ்டார்லி என்பவர் பாதுகாப்பான சைக்கிளை உருவாக்கியுள்ளார். 1962இல் நவீன சைக்கிள் பெருகத் தொடங்கியுள்ளது. இப்போது மின்சக்தி மூலமா இயங்குகிற சைக்கிள்கள் சந்தையில் கிடைக்கின்றன.


குறிப்பிட்ட தூரத்தைக் காரில் கடப்பதற்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனில் பாதியிருந்தால் போதும் அதே தூரத்தை சைக்கிளில் கடந்துவிடலாம். அது மட்டுமல்ல சைக்கிள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனம். ஒரு கார் நிறுத்தும் இடத்தில் சுமார் 15 சைக்கிள்களை நிறுத்திவிடலாம். சைக்கிளில் செல்ல நாமெல்லாம் ஹெல்மட் அணிவதில்லை. ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து செல்வதை 1991இல் சட்டமியற்றி அமல்படுத்தியுள்ளது.

கிரேக்க நாட்டுத் தலைநகர் ஏதன்ஸின் பிரெட் பிர்ச்மோர் என்னும் சாதனையாளர் 1935இல் சைக்கிளிலேயே உலகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் மைல்கள் சுற்றி வந்துள்ளார். இதில் 25 ஆயிரம் மைல்கள் தூரத்தை சைக்கிள் பெடலை மிதித்தே கடந்துள்ளார். எஞ்சிய தூரம் படகுப் பயணம். டூர் த பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்ஸில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயம். 1903இல் ஒரு பத்திரிகை விற்பனையை அதிகரிக்கும் உத்தியாகத்தான் இந்த சைக்கிள் பந்தயம் தொடங்கியுள்ளது.

Saturday, March 22, 2014

காமெடியேதான் வேணுமா?

(தி இந்துவில் 2014 மார்ச் 21 அன்று வெளியானது)


தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் வசூலை வாரிக் குவித்த படங்கள் கரகாட்டக்காரனும் சின்ன தம்பியும். இரண்டிலும் இசையும் நகைச்சுவையும் முக்கியப் பங்கு வகித்தன. இரண்டுமே கவுண்டமணி நடித்த படங்கள். 75 வயது நிறையும் கவுண்டமணி 700க்கும் மேற்பட்ட படங்களில் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தவர். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக அவ்வளவாக நடிப்பதில்லை என்றாலும் யுடியூபிலும் தொலைக் காட்சி சேனல்களிலும் அதிகம் பார்க்கப்படும் நகைச்சுவைக் காட்சிகளின் நாயகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணி. சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்படி நடித்த ஒரு நாடகத்தில் கவுண்டர் என்னும் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இதனால் 16 வயதினிலே படத்தில் இவரை அறிமுகப்படுத்தியபோது இயக்குநர் பாரதிராஜா சுப்பிரமணியைக் கவுண்டமணி ஆக்கிவிட்டார். கதாநாயகர்களுடன் மட்டுமே அடையாளம் காணப்படும் முத்திரை வசனங்களைக் கவுண்டமணி தன் பாணியில் காமெடி ரசத்துடன் பேசித் திரையரங்குகளை அதிரவைத்தார். அறிமுகப் படத்திலேயே ‘பத்த வச்சிட்டயே பரட்ட’ என்னும் பஞ்ச் வசனம் கவுண்டமணியை அடையாளம் காட்டியது. வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் ‘பெட்ரோ மாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’, சூரியன் படத்தின் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ போன்ற வசனங்கள் பல்வேறு தருணங்களில் அன்றாட வாழ்வில் மக்களால் நினைவுகூரப்படுகின்றன.

கவுண்டமணி செந்தில் ஜோடியினர் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். இவர் சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்களும் ரசிகர்களைச் சிரிக்கவைத்தன. நடிகன், பிரம்மா, ரிக்‌ஷா மாமா, தாய்மாமன், மாமன் மகள் போன்ற படங்களின் காமெடி காட்சிகள் எப்போது பார்த்தாலும் பெரும் சிரிப்பை எழுப்ப வல்லவை. ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய படங்களாலான நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் போன்றவற்றில் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுடன் நடித்த காட்சிகளிலும் கவுண்டமணி தனக்குரிய ஆளுமையை விட்டுக்கொடுத்ததில்லை. மன்னன், உழைப்பாளி ஆகிய படங்களில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தைச் சர்வ சாதாரணமாக முந்திச் செல்வார் கவுண்டமணி. விஜயசாந்தி முன்பு திரையரங்க மேடையில் ரஜினிகாந்த் உடைந்த கண்ணாடியுடன் தோன்றும் காட்சியில் ரஜினியைக் கிண்டல் செய்ய வேறு நகைச்சுவை நடிகர்களால் முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.

இயக்குநர் மணிரத்னத்தின் பகல் நிலவு, இதயக்கோவில் ஆகிய படங்களிலும் ஷங்கரின் ஜெண்டில்மேன் படத்திலும் கவுண்டமணிதான் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். சக நடிகர்கள் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு இயல்பான எதிர் வசனங்கள் பேசுவதில் கவுண்டர் மன்னர். சில சமயங்களில் அது மிகவும் சாதாரணமான வசனமாகவும் இருக்கும். ஆனால் சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்கும். உதயகீதம் படத்தில், செந்தில் “அண்ணே, நீங்க அறிவுக் கொழுந்துண்ணேன்” என்பார். பதிலாக கவுண்டமணி “கிள்ளி வாயில போட்டுக்கோடா” என்பார். இயக்குநர் மணிவண்ணன் நகைச்சுவைப் பாத்திரங்களில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியதும் கவுண்டமணியின் நகைச்சுவைப் படங்கள் குறையத் தொடங்கியதும் ஒருசேர நடந்தன. கவுண்டமணி சக்கை போடு போட்ட காலத்தில் சக நடிகர்களை அடிப்பதும், உடல் உருவத்தின் அடிப்படையில் நாகரிகமற்றுக் கிண்டல் செய்வதும் காமெடியா என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் கவுண்டமணியின் ரசிகர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

நகைச்சுவைப் பாத்திரங்களில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் தனது பங்களிப்பை முழுமையாகச் செலுத்திவருகிறார் கவுண்டமணி. இடையில் சில வருட ஓய்வுக்குப் பின்பு மீண்டும் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் தற்போது நடித்துவருகிறார். இதில் 49 ஓ படத்தின் கதாநாயகனே கவுண்ட மணிதான். ஏற்கனவே பணம் பத்தும் செய்யும், ராஜா எங்க ராஜா, பிறந்தேன் வளர்ந்தேன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்ட மணி கதாநாயகனாக நடித்துள்ளார். கவுண்டமணி தான் ஒரு திரைப்பட நடிகர் என்பதில் தெளிவாக இருக்கிறார். தன்னைப் பார்க்க வேண்டுமானால் ரசிகர்கள் திரையரங்கிற்குத்தான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அநாவசியமாகப் பிற ஊடகங்களில் அவர் தலைகாட்டுவதில்லை. தொலைக்காட்சிகளிலோ கலை நிகழ்ச்சிகளிலோ கவுண்டமணியைப் பார்க்க முடியாது. நகைச்சுவையைப் போலவே இதிலும் அவரது பாணி தனிப் பாணிதான்.

Tuesday, March 18, 2014

படச்சுருளுக்கு ஓர் இரங்கற்பா

(இது எனது மொழிபெயர்ப்பு கட்டுரை. தி இந்துவுக்காக செய்த முதல் மொழிபெயர்ப்பு தி இந்து நாளிதழில் 2014 மார்ச் 17 அன்று வெளியானது.)


ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருளைத் திரையில் ஓடும் வகையில் புராஸஸிங் செய்து வந்தது பிரசாத் பிலிம் லேபரட்டரி. இந்தியாவில் படச்சுருள் படங்களுக்கான காலம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இது மூடப்பட்டது. சினிமா தொடங்கிய காலம் முதல் இருந்துவந்த பழக்கம் மாறியதால் இதுவரையான ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய வாழ்வின் பாதையும் மாறிவிட்டது.

சமீப காலமாக டிஜிட்டல் திரைப்படங் கள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் பெரிய பிலிம் லேபரட்டரியான பிரசாத் கலர் லேப் தனது இயக்கத்தைக் கொஞ்சம் கொஞ் சமாக நிறுத்தத் தொடங்கியபோது பிலிமில் படமெடுக்கும் காலம் முடிவுக்கு வருகிறது என்னும் யதார்த்தம் நம்மைத் தாக்கியது. படச்சுருளை கேமராவில் மாட்டிப் படப்பிடிப்புக்குச் சென்று படமாக்குவார்கள். பின்னர் லேபில், கையுறை அணிந்த கைகளால் அந்தச் சுருளைக் கழுவி நெகட்டிவாகவும் பாஸிட்டிவாகவும் மாற்றுவார்கள். படச்சுருளைத் தனித்தனி காட்சிப் பிம்பங்களாக வெட்டுவார்கள். தேவையான காட்சிக் கோவையை உருவாக்குவார்கள். லேபின் இருட்டறைக் கொடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிம்பங்கள் அடங்கிய சுருள் ஒரு புறம் தொங்கிக் கொண்டிருக்கும். மறுபுறம் தேவையற்ற பிழையான பிம்பங்கள் அடங்கிய படச்சுருள் கிடக்கும். பின்னர் படச்சுருளில் ஒலி ஏற்றப்படும். தேவையான வண்ண மாற்ற வேலையும் நடைபெறும். இறுதி யாகத் திரையிடும் நிலையிலான படச்சுருள்கள் ரீல் பெட்டியில் அடுக்கப் பட்டுத் திரையரங்குக்கு அனுப்பப்படும். சுருண்டு கிடந்த படச்சுருள் புரொஜக்டரின் வழியே நொடிக்கு 24 பிம்பங்களாக ஓடும்போது கண்ணெதிரே திரையில் சினிமா எனும் மாயலோகம் பரவும். படச்சுருளில் சினிமா உருவாக்கப்பட்ட இந்த நூறாண்டுக் கதை முடிவுக்கு வரும் காட்சியின் பிம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணிலிருந்து மறைந்து ஞாபக அடுக்குகளில் தங்கத் தொடங்கின.

இதற்கெல்லாம் மேலாகப் படச் சுருளைக் கைகளால் தொடும்போது கிடைத்த அந்த ஸ்பரிசம், நாசி உணர்ந்த மணம் இவையெல்லாம் நினைவிலிருந்து அகலாது. இப்படிப் படச்சுருள் களோடும் திரைப்படத்தோடும் ஒட்டி உறவாடியவர்களின் வாழ்க்கையை டிஜிட்டல் சினிமா மாற்றிவிட்டது. படச்சுருளின் ரூபத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் அழித்துவிட்டது. இது தனிப்பட்ட இழப்பு அல்ல. “உண்மையிலேயே நீங்கள் அற்புதமான சில்வர் ஹேலைட் பிம்பங்களை இழந்து விட்டீர்கள், அவற்றின் தோற்றம், மதிப்பு மிக்க வண்ணக் கலவை, அவை உருவாக்கிய உணர்வு ஆகியவற்றை இழந்து விட்டீர்கள்” என்கிறார் எஸ் சிவராமன். இவர் பிரசாத் கலர் லேப் தொடங்கப்பட்ட 1976இல் அந்நிறுவனத்தில் சேர்ந்தவர்.

ஆயிரக்கணக்கான திரைப் படங்களில், நாட்டின் முக்கியமான இயக்குநர்களுக்காகவும் ஒளிப்பதிவாளர் களுக்காகவும் சிவராமன் பணியாற்றி யுள்ளார். தற்போது டிஜிட்டல் சினிமா வரவால் பிரசாத் லேப் மூடப்படுவதற்கு சாட்சியாக நிற்கிறார். டிஜிட்டல் பிம்பத்தில் ஒளித்துணுக்குகள் ஒரே நேர்கோட்டில் அமையும். ஆனால் பிலிமில் வெவ்வேறு விகிதத்தில் அமையும். எனவே பிம்பங்கள் மிக நேர்த்தியாகவும் துல்லியமாகவும் இருக்கும். டிஜிட்டல் சினிமாவை உருவாக்கக் குறைந்த காலமே தேவைப்படும். உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் விவரங்களைச் சேர்க்கலாம். எடுத்துக் காட்டாக, காட்சிகளை சென்னையில் தொகுக்கலாம். ஒலியை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பதிவுசெய்யலாம். டிஜிட்டலில் படச்சுருள் இல்லை என்பதால் தேவையைவிடப் பத்து மடங்குவரை அதிகமான காட்சிகளைப் படமாக்கிவிடுகிறார்கள். இதனால் படத்தொகுப்பு வேலை பெரும் சுமை யாகிறது. படச்சுருள் பயன்படுத்திப் படமாக்கியபோது ஏற்பட்ட தயாரிப்புச் செலவைவிட டிஜிட்டல் சினிமாவை உருவாக்க அதிக செலவாகிறது என்பதே உண்மை. ஏனெனில் படச் சுருள் பயன்படுத்தப்படும் மரபான கேம ராவைவிட டிஜிட்டல் சினிமாவுக்குப் பயன்படும் ஏரி அலெக்ஸா போன்ற கேமராவின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகம். டிஜிட்டல் சினிமாவில் தொழில்நுட்ப உதவியுடன் எடிட்டிங் மேசையிலேயே தேவையான துல்லியத்தைக் கொண்டுவர முடியும். எனவே படச்சுருளைக் கொண்டு படமாக்கியபோது ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த முக்கியத்துவம் இதில் கிடைப்பதில்லை.

டிஜிட்டல் கேமரா பயன்படுத்த எளிதாக உள்ளதென்கிறார் ஒளிப்பதிவாளர் மது அம்பாட். மேம்பட்ட தரத்தில் காட்சிகளைப் பதிவுசெய்ய முடிகிறது என்றும் அவர் கூறுகிறார். ‘ஆதாமின்ட மகன் அபு’ திரைப்படத்திற்காக 2011ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்ற மது அம்பாட் அப்படத்தின் காட்சிகளை ஏர்ரி டி 21 கேமராவில்தான் படம்பிடித்துள்ளார். டிஜிட்டல் சினிமாவிலும் பல நன்மைகள் உள்ளன. கழிவாகும் படச்சுருள் சூற்றுச்சூழலுக்கு கேடுவிளை விக்கக்கூடியது. ஆனால் டிஜிட்டல் சினிமா சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எடிட்டிங் வேலைசெய்யும்போது படச் சுருளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். டிஜிட்டல் சினிமாவில் இந்தப் பிரச்சினையே இல்லை. படத்தை வெளியீடு செய்வதும் எளிது. பிரதிகளின் எண்ணிக்கைக்கான செலவு பற்றிய கவலையே இல்லை. திரையரங்குகளுக்குத் திரையீட்டிற்காகப் படங்களை அனுப்புவதும் எளிது.

முன்பு நம்மிடம் புழங்கிய வீடியோ கேஸட்டுகள் சிடி, டிவிடி, ஹெச்டி, 3டி எனப் பலவிதமான பரிமாணங்களை அடைந்துவிட்டன. எனவே ஒரு படத்தை எந்தத் தொழில்நுட்பத்தில் பாதுகாத்து வைப்பது என்பதே முடிவுசெய்யப்படவில்லை. டிஜிட்டல் சினிமாவின் அளவைத் தேவை
யான அளவுக்கு குறைத்து அதிக எண்ணிக்கையிலான படங்களைச் சேமிக்க ஹார்ட் டிஸ்க் போன்ற தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. ஆனால் படங்களை அழுத்தி அதன் அளவைக் குறைக்கும் செயலில் தொழில்நுட்பப் பழுதால் திரைப்படத்தில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

டிஜிட்டல் சினிமா ஏராளமான இளைஞர்களைத் திரைப்படத் துறைக்கு இழுத்து வந்துள்ளது. மலையாளப் பட உலகம் இதற்குச் சான்றாக உள்ளது. புதிய இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் திரைத்துறைக்கு வந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்துப் பெரிய அளவிலான வெற்றி பெறுகிறார்கள். ஏற்கனவே திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் சினிமாவால் பாதிப்படைந் துள்ளனர். அதிகப் பொருள் செலவில் வழக்கமான கதையமைப்பில் அவர்கள் உருவாக்கும் திரைப் படங்கள் முன்பு போல் வசூலை வாரிக்குவிப்பதில்லை. புதிய டிஜிட்டல் சினிமா உருவாக்கம் திரைப்படத்துறையில் நம்பகத்தன்மை யற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சினிமா சந்தையைப் பாழ்படுத்துவ தாகவும் திரைப்படத் துறையினர் பலர் எரிச்சலடைகிறார்கள்.

நிறபேதம் நீக்கிய டிஜிட்டல்

கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு வழக்கமான திரைப்படம் செய்துவந்த அநீதியை டிஜிட்டல் சினிமா அறவே நீக்கிவிட்டது. படச்சுருளால் உருவான திரைப்படத்தில் சருமத்தின் தோற்றத்தில் நடுநிலை காணப்படாது. கறுப்பு நிறம் கொண்ட நடிகர்கள் அடர்கறுப்பு சூட் அணிந்திருந்தால் திரையில் வெள்ளைச் சட்டையையும் பற்களையும் மட்டுமே பார்க்க இயலும். கறுப்பு நிறம் தன்மீது விழும் ஒளியை முழுமையாக உமிழாது. குறிப்பிட்ட சதவிகித ஒளியை உள்வாங்கிவைத்துக் கொள்ளும். எனவே கறுப்பு நிற நடிகர்கள் திரையில் தெரிய அதிக வெளிச்சம் தேவைப்படும். ஒளிப்பதிவாளர்கள் கறுப்பு நடிகர்களை கேமராவுக்கு முன்னர் நிறுத்தும்போது அவர்கள் உடம்பில் வாஸலின் போன்ற பொருளைத் தடவுவார்கள். அப்போதுதான் உடம்பில் படும் ஒளி பிரதிபலித்து கேமராவுக்குத் திரும்பும்.

டிஜிட்டல் கேமரா கறுப்பு நிறத்தில் காணப்படும் நுண்ணிய வேறுபாடு களையும் அப்படியே படமாக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் படத்தொகுப்பின் போதும் தேவையான மாற்றங்களைச் செய்ய டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. கோடாக் நிறுவனம் ஷிர்லே என்னும் விளம்பர மாடலின் சருமத்தை அடிப்படையாகக் கொண்டே தங்கள் பிலிம் ரோலின் தரத்தை நிர்ணயித்தார்கள். கறுப்பு சாக்லேட் உற்பத்தியாளர்களும், கறுப்பு நிற ஃபர்னிச்சர்களை உருவாக்குபவர்களும் தங்கள் விளம்பரப் படங்கள் தரமற்று இருக்கிறது என கோடாக் நிறுவனத்திடம் புகார் செய்தனர். அதன் பின்னரே கறுப்பு நிறத்தைப் படமாக்கும் வகையில் அவர்கள் படச்சுருளைத் தயாரித்தார்கள். டிஜிட்டல் சினிமா என்னும் தொழில்நுட்ப மாற்றம் இந்த வரலாற்றுப் பிழையைப் போக்கிவிட்டது. நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கும் வசதி இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு வசப்படாமல் இருக்கலாம். ஆனால் கறுப்புத் தோல்களின் அடியில் மறைந்துகிடந்த உணர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பமே இன்று வெளிச் சத்துக்குக் கொண்டுவருகிறது.

©‘ஃப்ரண்ட் லைன் 2014’ ஆங்கிலத்தில் சசிகுமார். தமிழில். ந.செல்லப்பா.

சசிகுமார் கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர், நடிகர். இவர் ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்வி நிறுவனத்தை நடத்துவதுடன் அதன் தலைவராகவும் உள்ளார். ஏசியா நெட் மலையாள தொலைக்காட்சி அலைவரிசையை நிறுவியவர். இவர் கயா தரன் (Kaya Taran) என்னும் இந்திப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை உருவாக்கியதற்காக 2004 ஆம் ஆண்டில் ஜி அரவிந்தன் விருதைப் பெற்றுள்ளார். பத்திரிகைத் துறையில் சிறப்பாக பங்களித்ததற்காக 2007 இல் இவருக்கு விஜயராகவன் நினைவு விருது வழங்கப்பட்டது.